ஜெயலலிதா நினைவு தினம் : சசிகலாவின் முக்கிய அறிவிப்பு!!

 
sasikala


மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 5ம் ஆண்டு நினைவு நாள் அன்று சசிகலா மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்த உள்ளார்.

இதுகுறித்து அதிமுக தலைமை கழகம் என்ற பெயரில் சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "நம் இதய தெய்வம் புரட்சித் தலைவர் அம்மா அவர்கள் தமிழக மக்களின் உரிமைக்காகவும், ஏழை எளிய மக்களின் துயர் துடைக்கவும் ,தம் வாழ்நாள் எல்லாம் பாடுபட்டவர் . உயிர் தொண்டர்களின் நலனில் அக்கறைகொண்டு, தன்னலமின்றி ,பொது நலத்தோடு 'மக்களால் நான் மக்களுக்காகவே நான்' என்று தன்னை இறுதி மூச்சு வரை வாழ்ந்து காட்டிய , ஒப்பற்ற மக்கள் தலைவி,   நம் ஒவ்வொருவரின் இதயங்களிலும் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

sasikala

நம் இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கடைபிடித்த அதே கொள்கையோடு , அவர்கள் காட்டிய வழியில் தொடர்ந்து பயணிக்க , அவர்களது நினைவு நாளான 5ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்கு புரட்சித் தாய் சின்னம்மா அவர்கள் கழக தொண்டர்களோடு சேர்ந்து,  மெரினா கடற்கரையில் உள்ள புரட்சித்தலைவி அம்மா அவர்களின் நினைவிடத்தில் மலரஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்க இருக்கிறார்கள். 

SASIKALA

இந்த புனித நிகழ்வில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவியின் பாசறையில் பயின்ற பாசமிகு தொண்டர்களும், கழகத்தின் அனைத்து பிரிவு நிர்வாகிகளும், புரட்சித்தலைவி அம்மா அவர்களை தங்கள் முன் மாதிரியாக மனதில் வைத்து தன்னம்பிக்கையோடு வாழ்ந்து கொண்டிருக்கும் சிங்க பெண்களும்,  இளைஞர்கள் மற்றும் பொது மக்களும் ,சாதி மத பேதமின்றி ,கட்சி பாகுபாடு இல்லாமல் ஒரு தாய் வயிற்று பிள்ளைகளாக ஓரணியில் நின்று ஒற்றுமையாக இணைந்து ,அனைவரும் முக கவசம் அணிந்து,  சமூக இடைவெளியுடன் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.