ஜெ., மரணம் குறித்த ஆறுமுகசாமி ஆணைய விசாரணையில் சந்தேகம்... அரசு பதிலளிக்க உத்தரவு
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் நிறைய முரண்பாடுகள் உள்ளதால் சிபிஐ விசாரிக்ககோரிய வழக்கில் தமிழக அரசு பதவிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் ராம்குமார் ஆதித்தன் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில்,மறைந்த முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மரணம் குறித்து குறிப்பிட்டு, அப்பலோ மருத்துவமனைத் தலைவர் டாக்டர் ரெட்டி பொது வெளியில், இரு முறை ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் அறிக்கை வெளியிட தாங்கள் நிர்ப்பந்திக்கப்பட்டதாக கூறியுள்ளதாகவும், இன்று வரை யார் எதற்காக நிர்ப்பந்தம் செய்தார்கள் என்ற விவரம் இன்று வரை வெளி வரவில்லை என தெரிவித்துள்ளார்.
மருத்துவமனையில் செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு கொண்டிருந்த காலகட்டத்தில் ஜெயலலிதா அறிவித்ததாக ஜெயலலிதா பெயரில் தமிழக அரசு சார்பில் பல அறிக்கைகள் வெளியிடப்பட்டது. காவேரி நதி நீர் பங்கீடு சம்பந்தமாக அதிகாரிகளுடன் கலந்துரையாடல் நடந்ததாகவும் அமைச்சர்களுடன் ஆலோசனை கூட்டம் நடந்ததாக அறிவிப்பு வெளியானது. இது எவ்வாறு சாத்தியமானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஜெயலலிதா 5.12.2016 அன்று இரவு 11.30 மணிக்கு இறந்ததாக அப்பலோ மருத்துவமனை பொய் சான்று அளித்ததுள்ளதாகவும், ஜெயலலிதா அதற்கு முன்பே இறந்துள்ளார். அப்பலோ மருத்துவமனை தலைவர் டாக்டர் பிரதாப் ரெட்டி 22.03.2018 அளித்த பேட்டியில் மருத்துவமனையில் உள்ள சிசிடிவி கேமராக்கள் நிர்பந்தத்தின் பேரில் அகற்றப்பட்டதாகவும் அணைத்து வைக்கப்பட்டதாகவும் கூறினார். யார் நிர்ப்பந்தம் செய்தது என்று கூறவில்லை. மேலும் ஜெயலலிதா அவர்களுடன் தங்கியிருந்தவர்கள் தான் யாரையும் உள்ளே விடவில்லை என்று கூறியுள்ளார். ஜெயலலிதாவின் ரத்த சொந்தமும் சட்டரீதியான வாரிசான அவரது அண்ணன் மகள் தீபா மற்றும் மகன் தீபக் ஆகியோரில் தீபக் தான் மருத்துவமனைக்குள் பல நாட்கள் சென்று தனது அத்தையை சந்தித்தாக கூறினார். அதே நேரத்தில் காவல்துறையினர் தீபாவை மருத்துவமனைக்குள் அனுமதிக்க மறுத்ததும் மருத்துவமனைக்குள் அனுமதிக்க கோரி தீபா நடத்திய போராட்டங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பப்பட்டது. எதற்காக தீபா அனுமதிக்கப்படவில்லை என்று தெரியவில்லை.
திரு. ஒ. பன்னீர்செல்வம் தான் வீட்டில் இருந்த போது மாலை 4.30 மணிக்கு ஜெயலலிதா இறந்ததாக மாலை 6.35 மணிக்கு தகவல் கிடைத்ததாக கூறியுள்ளார். மேலும் மருத்துவ சிகிச்சை சம்பந்தமாக தன்னிடம் எதுவும் விவாதிக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் ஆறுமுகச்சாமி ஆணையத்தில் அவ்வாறான கருத்துக்களை கூறவில்லை. திண்டுக்கல் சீனிவாசன் ஒரு பொதுக் கூட்டத்தில் நாங்கள் ஜெயலலிதா உடல்நிலை குறித்து பொய் சொன்னோம். மன்னித்துவிடுங்கள் என்று கூறினார். யார் சொல்லி பொய் சொன்னதாக கூறவில்லை. அப்போதைய அதிமுக முதலமைச்சர், திண்டுக்கல் சீனிவாசனிடம் எதுவும் விசாரிக்கவில்லை. அவரை அமைச்சர் பதவியில் இருந்தும் நீக்கவில்லை. தொடர்ந்து அதிமுக கட்சியின் பொருளாளர் பதவி அளித்துள்ளார்.

ஜெயலலிதா இறந்த பிறகு விளக்கம் அளிக்க 06.02.2017 அன்று சென்னை வந்த டாக்டர் பீலே, ஆறுமுகச்சாமி ஆணையத்தில் சாட்சியம் சொல்ல வரவில்லை. வீடியோ கான்பரன்ஸ் மூலம் ஆணையத்தில் ஆஜராகவும் மறுத்துவிட்டார். அதே போல் ஆறுமுகச்சாமி ஆணைய அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்ட சசிகலா தனது தரப்பை பரப்பன அக்ஹரகார சிறையில் இருக்கும் போது எழுத்துப்பூர்வமாக அளித்தார். சிறையில் இருந்து வந்த பிறகு அவர் நேரில் ஆஜராக அழைக்கப்படவில்லை,அவரிடம் குறுக்கு விசாரணை நடத்தப்படவில்லை. எனவே ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணையில் நிறைய முரண்பாடுகள் உள்ளது சந்தேகங்கள் உள்ளது தீர்க்கப்படாத சந்தேகங்கள் உள்ளது. எனவே இதுகுறித்து நீதிமன்ற மேற்பார்வையில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் இதுகுறித்து தமிழக அரசு இரண்டு வாரத்திற்குள் பதிலளிக்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனர்.


