மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் - ஓபிஎஸ் மரியாதை
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி ஓபிஎஸ் மரியாதை செலுத்தினார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது . தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அரசியல் தலைவருமாக மிகப்பெரிய ஆளுமையாக தமிழ்நாட்டில் திகழ்ந்தவர் ஜெயலலிதா. ஆரம்ப காலத்தில் திரைப்படங்களில் நடித்து நடிகையாக பெரும் செல்வாக்கு பெற்ற இவர் பின்னர் எம்ஜிஆர் தலைமையிலான அதிமுகவில் கடந்த 1982 ஆம் ஆண்டு இணைந்து கொள்கை பரப்பு செயலாளர் ஆனார். இதன் பிறகு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் , அதிமுகவின் பொது செயலாளர் என படிப்படியாக முன்னேறினார் . தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்த இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார்.
இந்நிலையில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மலர் தூவி மரியாதை செலுத்தினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தியபின் சிலை அருகே அமர்ந்தார் ஓபிஎஸ். இதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில் அவர் சிறைக்கு சென்ற போது , அவரால் முதல்வராக்கப்பட்ட ஓபிஎஸ் தற்போது அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.