“எனக்கு சீட் கொடுக்க கூடாதா? தளபதி தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது” - ஜோதிமணி
திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? என காங்கிரஸ் எம்பி ஜோதிமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

மதுரையில் வீர வணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக மாவட்ட மாநகர செயலாளரும், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினருமான கோ.தளபதி கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் உரையாற்றிய தளபதி, “மாணிக்கம் தாகூர், ஜோதிமணி போன்றோர் இன்று அதில் பங்கு வேண்டும், இதில் பங்கு வேண்டும் என்கிறார்கள். இந்த தேர்தலில் யார் எம்.எல்.ஏ. ஆனால் என்ன? ஆகாவிட்டால் என்ன? என அவர்கள் நினைக்கிறார்கள். இவையெல்லாவற்றையும் தலைமை புரிந்து அவர்களுக்கு அடுத்தமுறை சீட்டே கொடுக்கக்கூடாது. நாம் இல்லாவிட்டால் INDIA கூட்டணியே கிடையாது. ஒரு தொகுதிக்கு ரூ.3,000, ரூ.4,000 ஓட்டு தான் இருக்கிறது. வார்டுகளில் பூத் கமிட்டு போட ஆள் இல்லாத கட்சி காங்கிரஸ். .” என விமர்சித்திருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்பி ஜோதிமணி, “திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. கோ.தளபதி அவர்கள் தேவையில்லாமல் என்னை வம்புக்கு இழுக்கக்கூடாது. நீங்கள் மதுரையில் இருக்கிறீர்கள் நான் கரூரில் இருக்கிறேன். என்னைப் பற்றிப் பேச வேண்டிய அவசியம் உங்களுக்கு என்ன இருக்கிறது? காங்கிரஸ் கட்சியில் யார் போட்டியிட வேண்டும் என்பதை எமது தலைவர் ராகுல்காந்தி முடிவுசெய்வார். அது குறித்து உங்களிடம் யாரும் ஆலோசனை கேட்கவில்லை. அதே போல காங்கிரஸ் கட்சியை இப்படி தொடர்ந்து பொதுவெளியில் அவமதிப்பதை நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். களத்தில் செயல்படுவதில் கடுமையான நெருக்கடிகள் உள்ளபோதும், கூட்டணி தர்மம் கருதியும், முதலமைச்சர் அண்ணனுக்காகவும் தான் அனுசரித்துப் போகிறோம்.அமைதி காக்கிறோம். கூட்டணியின் கண்ணியம் கருதி இதுவரை நான் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கூட பேசவேண்டிய இடத்தில் தான் பேசியிருக்கிறேன். வயதிலும் அனுபவத்திலும் மூத்தவர் நீங்கள். அதே கண்ணியத்தை நீங்களும் கடைபிடிப்பதுதான் நல்லது. தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணியின் தலைவராக பொறுப்புடன் நடந்துகொள்ளும் முதலமைச்சர் அவர்களை தர்மசங்கடத்திற்கு உள்ளாக்காமல் அரசியல் செய்யுங்கள். அதுதான் அனைவருக்கும் நல்லது” எனக் குறிப்பிட்டுள்ளார்.


