‘என் வெற்றிக்கு காரணம் செந்தில்பாலாஜிதான்’... ஜோதிமணி பரபரப்பு தகவல்

 
ஜோதிமணி ஜோதிமணி

நாடாளுமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஜோதி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

கோபமாக வெளியேறிய ஜோதிமணி; நடந்தது என்ன? செந்தில் பாலாஜி விளக்கம்

இதுதொடர்பாக ஜோதிமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “கரூர் நாடாளுமன்ற தேர்தலை இந்தியா கூட்டணியின் சார்பில் களத்தில் முன்நின்று நடந்தி, இரண்டாவது முறையாக மகத்தானதொரு வெற்றியைத் தேடித்தந்த  திமுகவின் மாண்புமிகு அமைச்சர்கள்,மாவட்ட செயலாளர்கள்,பொறுப்பாளர் ,சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட  இந்தியா கூட்டணி கட்சித் தலைவர்கள் ,நிர்வாகிகள் அனைவரையும் நேரில் சென்று சந்தித்து நன்றி தெரிவித்தேன்.  இன்னும் ஒருவருக்கு நன்றி சொல்லாமல் இப்பணி முழுமை அடையாது. நேரில் சந்திக்க முடியவில்லை என்றாலும், திமுகவின் கரூர் மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர், எந்த சூழலிலும் தனது போர்க்குணத்தைக் கைவிடாத திரு செந்தில் பாலாஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.  

கடந்த நாடாளுமன்ற தேர்தலை அதிமுகவின் வெளிப்படையான அராஜகங்கள்,வன்முறைக்கு இடையே அவர்  முன்னின்று நடத்தினார். மக்களின் பேரன்போடும்,பேராதரவோடும் ஒரு மகத்தான் வெற்றியை நாங்கள்  பெற்றோம். இம்முறை அவர் களத்தில் முன்னின்று தேர்தலை நடத்த முடியவில்லை. பாஜகவின் அராஜகம், அவரை இந்த தேர்தலில் களத்தில் முன் நின்று செயல்படவிடாமல் தடுத்தது. அவர் நேரடியாக பங்கேற்க முடியவில்லையென்றாலும், கடந்த காலங்களில், அவர் இரவு பகலாக உழைத்து உருவாக்கி,பயிற்சியளித்து, வழிநடத்திய  கரூர் மாவட்ட திமுக ,ஒரு படை போல நின்று, அர்ப்பணிப்போடு பணியாற்றி,இந்தியா கூட்டணியை வழிநடத்தி  கரூர் மாவட்டத்தில் மீண்டுமொரு மகத்தான வெற்றியை சாத்தியமாக்கியிருக்கிறது. 


இந்த வெற்றிக்குப் பின் திரு. செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த காலத்தில் அமைச்சர் பணியோடு சேர்த்து, மாவட்ட செயலாளராக செலுத்திய அசுர உழைப்பும், இடைவிடாத தேர்தல் பணிகளும், அவர் களத்தில் இல்லாத இந்த நேரத்திலும் உறுதுணையாக இருந்தது. கடந்த முறை வெற்றிச் சான்றிதழை பெறும் போது அவர் அருகில் இருந்தார். இம்முறை இல்லை என்கிற வருத்தமிருந்தாலும், தேர்தல் களத்தில் அவர் இல்லை என்று  கொண்டாடியவர்களுக்கு,  மக்களின் பேரன்போடும், பேராதரவோடு நாங்கள் இரண்டாவது முறையாக  பெற்ற மகத்தான் வெற்றி, பதிலடி தந்திருக்கிறது என்பதில் மகிழ்ச்சி” எனக் குறிப்பிட்டுள்ளார்.