சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக கே.சுரேந்தர் பதவியேற்பு..!!
தெலங்கானா உயர் நீதிமன்றத்தில் இருந்து இடமாற்றம் செய்யப்பட்ட நீதிபதி கே.சுரேந்தர் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், பவானி சுப்பராயன், ஹேமலதா, நக்கீரன், சிவஞானம் ஆகிய 5 நீதிபதிகள் கடந்த மாதம் பணி ஓய்வு பெற்றனர். இதனையொட்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகளின் காலிப்பணிடங்களின் எண்ணிக்கை 16ஆக உயர்ந்தது. இதனையடுத்து கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி ஹேம்ந்த் சந்தன் கவுடர் மற்றும் தெலங்கானா உயர்நீதிமன்ற நீதிபதி கே.சுரேந்தர் ஆகிய இருவரை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்ற கொலிஜியம் பரிந்துரை செய்திருந்தது. இதற்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்த நிலையில், தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் இருந்து நீதிபதி கே.சுரேந்தர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.

தொடர்ந்து இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நீதிபதி கே.சுரேந்தரை பதவியேற்றுக்கொண்டார். தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அவரை வரவேற்று பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி எஸ் ராமன், 2022 ஆம் ஆண்டு தெலங்கானா உயர் நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்ட நீதிபதி சுரேந்தர் 22,622 வழக்குகளை முடித்து வைத்துள்ளதாகவும், நீதிபதியாக பொறுப்பேற்கும் முன் தில்சுக் நகர் குண்டுவெடிப்பு வழக்கு , சத்தியம் கம்ப்யூட்டர்ஸ் முறைகேடு வழக்கு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் அரசு சிறப்பு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளதாகவும் சுட்டிக்காட்டி பாராட்டினார்.
மேலும் பதவியேற்பு நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி சுரேந்தர், அரசியல் சாசனத்திற்கும், நீதித்துறைக்கும் குறிப்பிடத்தக்க பங்கை வழங்கி இருக்கும் சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதலாக கற்றுக் கொள்ளும் ஆவலுடன் வந்திருப்பதாகவும், இடமாற்றம் என்பது புதிய துவக்கம் என்றும் அவர் தெரிவித்தார். நீதிபதி சுரேந்தர் பதவியேற்றதை அடுத்து அவருடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக உயர்ந்துள்ளது.


