ஊழல் திமுக ஆட்சிக்கு எதிரான அறப்போராட்டங்கள் தொடரும் - அண்ணாமலை அதிரடி!

 
Annamalai

மக்கள் விரோத போக்கை தொடரும் ஊழல் திமுக ஆட்சிக்கு எதிரான தமிழக பாஜகவின் அறப்போராட்டங்கள் தொடரும் என மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அண்ணாமலை வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஊழல் திமுக அரசைக் கண்டித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், கனிம வளக் கொள்ளையினைத் தடுக்க வேண்டும், பள்ளி கல்லூரிகளில் ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக பாஜக சார்பாக இன்று தமிழகமெங்கும், ஒவ்வொரு ஊராட்சி, பேரூராட்சி,  நகராட்சி, மாநகராட்சியிலும் பல்லாயிரக்கணக்கான  இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழை எளிய மக்களை வதைக்கும் இந்த ஊழல் திமுக அரசினைக் கண்டித்து நடைபெற்ற இந்த அறப்போராட்டத்தில், சென்னை கிழக்கு மாவட்டம் 198வது வட்டத்தில், மாவட்டத் தலைவர் திரு சாய் சத்யன், 198 ஆவது மாமன்ற உறுப்பினர் திரு லியோ N. சுந்தரம் மற்றும் பாஜக சகோதர சகோதரிகளுடன் நானும் பங்கேற்றேன். 


சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, விலைவாசி உயர்வு, மக்கள் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மது விற்பனை, தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை வஞ்சிப்பது என ஒட்டுமொத்தமாக மக்கள் விரோத போக்கை தொடரும் இந்த ஊழல் திமுக ஆட்சிக்கு எதிரான தமிழக பாஜகவின் அறப்போராட்டங்கள் தொடரும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.