தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக வாழ்த்துக்கள் - அண்ணாமலை
தமிழ்நாட்டில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாப்பட்டு வருகிறது. இந்த நாளில் மத்திய அரசு சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. அந்தவகையில் 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு நாடு முழுவதிலும் இருந்து மொத்தம் 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில், தமிழ்நாட்டில் இருந்து 2 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ளனர். மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் பள்ளி ஆசிரியர் காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் என்பவரும், தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் வீரகேரளம்புதூர் அரசு பள்ளி ஆசிரியை மாலதி ஆகிய இருவரும் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 ஆசிரியர்களில், தமிழகத்திலிருந்து, மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி…
— K.Annamalai (@annamalai_k) August 27, 2023
இந்த நிலையில், தமிழ்நாட்டில் இருந்து நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள 2 ஆசிரியர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில், 2023 ஆம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, நாடு முழுவதும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 50 ஆசிரியர்களில், தமிழகத்திலிருந்து, மதுரை அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. காட்வின் வேதநாயகம் ராஜ்குமார் மற்றும் தென்காசி வீரகேரளம்புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை திருமதி. மாலதி ஆகிய இருவரும் தேர்வு செய்யப்பட்டுள்ள செய்தியறிந்து மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். அவர்கள் இருவருக்கும், தமிழக பாஜக சார்பாக மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டின் எதிர்காலமான மாணவர்களை, தலைசிறந்தவர்களாக உருவாக்கும் உன்னதப் பணியில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் அனைவருமே போற்றுதலுக்குரியவர்கள். தமிழகத்திலிருந்து மேலும் பல நல்லாசிரியர்கள் உருவாக, இந்த விருதுகள் உத்வேகமாக அமையட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.