‘‘இராமர் கோவில்’’ என்பது வாக்கு சேகரிக்கும் - ஹிந்துராஷ்டிர விழாவே: கி.வீரமணி

 
k veeramani

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையையே தகர்க்கும் ஒன்றிய பி.ஜே.பி. அரசை வீழ்த்திட, ‘இந்தியா’ கூட்டணியின் ஒருங்கிணைப்புப் பிரச்சாரமும், ஒற்றுமையும் தேவை, தேவை என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

K veeramani

இதுதொடர்பாக  கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “பல சோதனைகளை - இயற்கை உற்பாதங்களை ஆண்டு இறுதியில் அதிகம் தந்த ஆண்டாக அமைந்து, ஜனநாயகத்தின் எதிர்காலத்தைக் கேள்விக் குறியாக்குதே ஒன்றிய பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். ஆட்சி! இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைத் தத்துவங்களையும், விழுமியங்களையும் விடை கொடுத்தனுப்பியது பி.ஜே.பி. ஆட்சி! இந்த விந்தை ஆட்சியின் வினையாடல்களுக்கும், அனைத்து முற்போக்கு உலகத்தவரின் முகம் சுளிப்புக்கும், முழு விமர்சனங்களுக்கும் இடம் தந்த 2023 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது.

‘தோலிருக்க, சுளை முழுங்கும்‘ ஓர் ஆட்சி!

2024 ஆம் ஆண்டான புத்தாண்டு இன்று (1.1.2024) தொடங்கியது. இவ்வாண்டின் இன்னும் மூன்று, நான்கு மாதங்களில் ஒன்றிய அரசுக்கான பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், இவ்வாண்டு மிக முக்கியமான, மக்களின் விழிப்புணர்வின் தேவையை வலியுறுத்தும் ஆண்டாக உள்ளது!
நமது அரசமைப்புச் சட்டத்தின் கர்த்தாக்கள் குறிப்பாக டாக்டர் அம்பேத்கர் உருவாக்கிய சட்டத்தின் முகப்புரையில் உள்ள 1.இறையாண்மை 2.சமதர்மம் 3.மதச்சார்பின்மை, ஜனநாயகம் 4.குடியரசு என்பனவற்றின் முக்கியத்துவம் (Core Values) கடந்த நான்கு ஆண்டுகளில் வெகுவாகக் காணாமற் போய்க் கொண்டுள்ளது!
அரசின் அமைப்புகளில் வெளிப்படைத்தன்மைக்குப் பதில், ‘தோலிருக்க, சுளை முழுங்கும்‘ வகையில், மக்கள் பிரதிநிதிகளின் குரல் - எதிர்க்கட்சியினர் குரல் கேட்கப்பட முடியாததாக்கப்பட்டு, வரலாறு காணாத வகையில் 146 உறுப்பினர்கள் தொடர் முழுவதும் (சிலர் அடுத்தத் தொடர் வரையிலும்) ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்ட நிலையில், 5 சட்டங்கள் - மிக முக்கிய குற்றவியல் சட்டங்கள் உள்பட, சம்பந்தமான மசோதாக்கள் வெறும் ஆளுங்கட்சியினர் மட்டுமே ஓட்டளித்து நிறைவேற்றப்பட்டுள்ள விசித்திரம் நடந்துள்ளது!

பறிபோகும் மாநில உரிமைகள்!

உச்சநீதிமன்ற நீதிபதிகள் நியமனப் பிரச்சினையிலும் சரி, தேர்தல் ஆணையத்தின் உறுப்பினர்கள் போன்ற (ஜனநாயகக் காப்புப் பிரச்சினை) உறுப்பினர்கள் நியமன முறையிலும், அதன் ஆணைகளுக்கு நேர் எதிர்நிலைப்பாட்டை பா.ஜ.க. ஆட்சி எடுத்து, தானடித்த மூப்பாகவே நடந்துகொண்டுள்ளது!

மாநில உரிமைகள் அன்றாடம் பறிபோகும் பரிதாபம்!


எதிர்க்கட்சிகள்மீது மட்டும் பாயும் அமலாக்கத் துறை, வருமான வரித் துறை, சி.பி.அய். போன்றவை!
ஊடகங்கள், ஜனநாயகத்தின் நான்காவது தூண், கலகலத்துப் போகும் அளவுக்கு, அச்சுறுத்தப்பட்டு, அவர்களின் எண்ணப்படி நடக்கும் நிலை!
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்களை அரசியல் ஏவுகணைகளாக்கி, அவ்வாட்சிகளை முறைப்படி நடத்தவிடாமல் முடக்கும் விந்தை!

எல்லாம் ‘ஜூம்லா’தானா?

தேசியப் பேரிடர் போன்ற நிலையில், நிவாரணத்தை அள்ளி வழங்கவேண்டிய நேரத்தில், கிள்ளியும் தருவதற்கு மனு போட்டுக் காத்திருக்கும் மாநில அவலங்கள், இப்படி எத்தனை எத்தனையோ! கொடுத்த வாக்குறுதிகள், விலைவாசி, வேலை வாய்ப்புத் தரும் திட்டங்கள், மக்கள் நல உதவிகள் எல்லாம் ‘ஜூம்லா’’ - சும்மாப் பேச்சு - இப்படி ஓர் ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. ஆட்சி, மீண்டும் 2024 தேர்தலில் வெற்றி பெற்றால், அத்துடன் ஜனநாயகம் காணாமற்போய்விடும் என்பது கல்லின்மேல் எழுத்து!

k veeramani

இராமர் கோவில் திறப்பின் பின்னணி என்ன?

இப்போதோ  ஹிந்துராஷ்டிரக் கொடியை ஏற்றுகிறோம் என்று உலகிற்குக் காட்டிடவும், வாக்குகளைத் திரட்டிடவும், அதிருப்தியில் இருக்கும் மக்களை மயக்கவே இராமர் கோவில்.
எனவே, தமிழ்நாடுபோல், ‘இந்தியா’ கூட்டணியை வெற்றி பெறச் செய்ய பொறுப்புடனும், கவலையுடனும் கூடிய ஓர் ஆக்கப்பூர்வ செயல்முறைத் திட்டமாக - விட்டுக் கொடுத்து, வெற்றி வாய்ப்புகளையே ஒரே இலக்காகக் கொண்டு - வேட்பாளர்களை, பா.ஜ.க.வுக்கு எதிராக நிறுத்தும் திட்டத்தை ‘இந்தியா’ கூட்டணி உருவாக்குதல் அவசரம், அவசியம்!
2024 இல் முக்கிய முன்னுரிமைப் பணி இது!
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, ஒப்பற்ற முதலமைச்சர்  மாண்புமிகு மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களது சீரிய தலைமையில் நடைபெறும் ‘திராவிட மாடல்’ ஆட்சியை, ‘வாளும்- கேடயமாக’ நின்று, திட்டமிட்ட திரிபுவாதப் பிரச்சாரத்தின் பொய்த் திரையைக் கிழித்தெறிந்து, உண்மைகளை உலகறியச் செய்யும் உன்னத பணியை அனைத்து முற்போக்காளர்களும், கட்சிக் கண்ணோட்டமின்றி ஒன்றுபட்டு செய்ய முன்வரவேண்டும்.

நமது புத்தாண்டு
வாழ்த்துச் செய்தி இதுதான்!

திராவிடர் கழகம் ஒரு பிரச்சார இயக்கம் ஆனபடியால், திண்ணைப் பிரச்சாரம், தெருமுனைக் கூட்டங்கள், அரங்குக் கூட்டங்கள், பொதுக்கூட்டங்கள், தனித்த உரையாடல்கள் காணொலி கூட்டங்கள் ஆகிய எல்லா களங்களிலும் ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை - சமூக வலைத்தளங்கள் மூலமாகவும், பல உத்திகளோடும் செய்து வருவதையே வரும் மாதங்களில் முன்னுரிமைப் பணிகளாக - காவிக் கிருமிகள் இந்த தேசத்தின், ஜனநாயகத்தினைப் பற்றி அழிக்காத வண்ணம் தீவிரமாக நாளும், மணியும், நிமிடமும் ஓய்வின்றி பணியாற்றிட சூளுரை மேற்கொள்ளவேண்டும்! ‘‘குடிசெய்வார்க்கில்லை பருவம்‘’ என்ற குறளுக்கேற்ப, நமது தொண்டு பருவம் பாராது, மானம் பாராது, அதே இலக்குடன் உழைத்து, வெற்றிக்கனியைப் பறிக்க நாம் துவளாது துணை நிற்போம்! வாரீர்! வாரீர்!! வாரீர்!!! அனைவருக்கும் இதுவே புத்தாண்டு வாழ்த்துச் செய்தியாகும்!” எனக் குறிப்பிட்டுள்ள்ர்.