முதல்வரின் அறிவிப்புக்கு கமல் ஹாசன் வரவேற்பு - ஆனால் ஓர் கோரிக்கை...!!

 
kamal

விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிப்பை கமல் ஹாசன் வரவேற்றுள்ளார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் நோக்கில், கடந்த 21ஆம் தேதி மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் ஹாசன்  தலைமை செயலாளர் இறையன்புவை நேரில் சந்தித்து, ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அத்துடன் 12 ஆண்டுகளுக்கு முன் சட்டமியற்றப்பட்டு இன்னமும் நடைமுறைக்கு வராத ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டிகளை நடைமுறைப்படுத்தக் கோரி தலைமைச் செயலாளரிடம் மனு கொடுத்ததுடன், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி மலர ஏரியா சபைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்றும் வலியுறுத்தினார். இந்த சூழலில் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், காவல் துறை, வனத்துறை அதிகரிகளுடன் 3 நாட்கள் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ,  "மாநகராட்சிகளிலும், நகராட்சிகளிலும், பகுதி சபை, வார்டு சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு மக்களின் குறைகள் களையப்படும்" என்றார். 

tn
இந்நிலையில் மக்கள் நீதி மய்ய தலைவரும், நடிகருமான கமல் ஹாசன் ட்விட்டர் பக்கத்தில், "நகர்ப்புற உள்ளாட்சிகளில் மக்கள் பங்கேற்புடன் கூடிய மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்புகளை நடைமுறைப்படுத்த மக்கள் நீதி மய்யம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது. கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழக தலைமைச் செயலாளரிடம் மனுகொடுத்தோம். 12 ஆண்டுகளுக்கு முன்னரே சட்டமியற்றப்பட்டு இன்னமும் செயல்பாட்டுக்கு வராத இந்த அமைப்புகளை உடனே நடைமுறைப்படுத்த வலியுறுத்தி தமிழகம் முழுக்க உள்ள மாவட்ட ஆட்சித் தலைவர்களிடம் மக்கள் நீதி மய்யத்தின் நிர்வாகிகளும் மனு கொடுத்தார்கள். 

kamal health

சமீபத்தில் நடந்த மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,காவல்துறை,வனத்துறை அலுவலர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார். தமிழகமுதல்வரின் இந்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் சார்பாக வரவேற்கிறேன். பாராட்டுகிறேன். அதேசமயம், இந்த நடைமுறையை நகராட்சி, மாநகராட்சிகளில் மட்டுமல்லாமல் பேரூராட்சிப் பகுதிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும். அதற்குரிய சட்ட திருத்தத்தை தமிழக அரசு கொண்டுவரவேண்டும் என்று தமிழக முதல்வரை வலியுறுத்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்/