"முதுகுளத்தூர் மாணவன் மரணம்; நீதி நிலைநாட்டப்பட வேண்டும்” - கமல்ஹாசன் கருத்து!
முதுகுளத்தூர் கல்லூரி மாணவனின் மர்ம மரணம் காவல் துறையினர் மீது சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர்களும் மக்களும் கொந்தளித்துள்ளனர். ராமநாதபுரத்தில் நீர்க்கோழியேந்தல் கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் மணிகண்டன். இவர் வாகனச் சோதனையில் நிற்காமல் சென்றதாக கீழத்தூவல் காவல்நிலையத்துக்கு டிச.4 ஆம் தேதி அழைத்துச் செல்லப்பட்டார். பின்னர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்ட மணிகண்டன், 5ஆம் தேதி அதிகாலை உடல்நலக் குறைவால் மர்மமான முறையில் உயிரிழந்திருந்தார்.
அவரின் உறவினர்கள், ‘காவல்துறை விசாரணையினால்தான் மணிகண்டன் இறந்தார்’ எனக் கூறி உடலை வாங்க மறுத்து வருகின்றனர். ஆனால் இதை மறுக்கும் காவல் துறையினர் மணிகண்டன் இருந்தபோது எடுக்கப்பட்ட சிசிடிவி காட்சியும் வெளியிட்டனர். இச்சூழலில் மணிகண்டனின் பெற்றோர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அவரின் உடலை வீடியோ பதிவுடன் மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்யவேண்டுமெனும் உயர்நீதி மன்றத்தின் உத்தரவை மநீம வரவேற்கிறது. வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
— Kamal Haasan (@ikamalhaasan) December 8, 2021
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பதிவிட்டுள்ள ட்வீட்டில், "முதுகுளத்தூர் அருகே நீர்க்கோழிந்தல் கிராமத்தைச் சேர்ந்த மாணவர் மணிகண்டனின் மர்ம மரணத்தில் மறு உடற்கூராய்வு செய்ய வேண்டுமெனும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மக்கள் நீதி மய்யம் கட்சி வரவேற்கிறது. மேலும், மாணவர் மரணம் தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்தப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்" என்று குறிப்பிட்டிருக்கிறார்.