சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற தர்மனுக்கு கமல்ஹாசன் வாழ்த்து

 
kamal-haasan-344

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்தினத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் வெற்றி பெற்றுள்ளார்.  சிங்கப்பூர் அரசின் முன்னாள் துணை பிரதமராக இருந்த இவர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றதன் மூலம் புதிய அதிபராக பதவி ஏற்கிறார்.  அதிபர் தேர்தலில் 70. 4 சதவீத வாக்குகளை பெற்று சிங்கப்பூரின் 9வது அதிபராக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.  சிங்கப்பூரின் அதிபர் ஹலிமாவின் ஆறு ஆண்டுபதவிக்காலம் இந்த மாதம் 13ம் தேதியுடன் நிறைவடையும் நிலையில் அதிபர் தேர்தல் நடத்தப்பட்டது. சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் முதல் முறையாக வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்கள் வாக்களிக்க அனுமதி வழங்கப்பட்டது. இதன் வாயிலாக சிங்கப்பூரில் ஒன்பதாவது அதிபர் ஆனார் தமிழரான தர்மன் சண்முக ரத்னம்.


இந்த நிலையில், சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தர்மன் சண்முகரத்தினத்திற்கு மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், மனமார்ந்த வாழ்த்துக்கள தர்மன்.  நீங்கள் சிங்கப்பூர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டது, உலகெங்கிலும் உள்ள தமிழ் மக்களுக்கும் பெருமை சேர்க்கும் தருணம். உங்கள் தலைமையில் இரு நாட்டு நட்புறவு அதன் உச்சத்தை எட்டும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.