இன்ஸ்டாகிராம், சாட் ஜிபிடியை நம்பாதீர்கள் - கனிமொழி

 
ச்

தேர்தல் என்பது மக்களுடைய முடிவு, அதை திராவிட முன்னேற்றக் கழகம் எப்போதும் தலைவணங்கி ஏற்றுக் கொள்கிறது. தேர்தல் தோல்விகளைக் கண்டு நாங்கள் தொய்வடைவதில்லை; எப்போதும் உங்களோடு நின்று, உங்களோடுதான் பயணிப்போம் என தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசினார்.


​கோவை மாதம்பட்டி பகுதியில்  நடைபெற்ற திராவிட இயக்க சுயமரியாதை திருமண விழா ஒன்றில் கனிமொழி எம்.பி கலந்துகொண்டு, மணமக்களை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து பேசிய கனிமொழி, “தேர்தல் முடிவில் மக்களின் தீர்ப்பிற்கு   தலைவணங்குவோம். தேர்தல் முடிவுகள் வந்த பிறகு, பேரறிஞர் அண்ணா அவர்களின் தோல்வியின்போது அவருக்கு ஆறுதல் சொல்ல எல்லாரும் தேடிக்கொண்டிருந்தனர். ஆனால் அவரோ, தேர்தல் முடிவு வந்தவுடன் திரையரங்கிற்குச் சென்று படம் பார்க்கப் போய்விட்டதாகக் கூறினாராம். அந்த வழியில் வந்தவர்கள் நாம். தேர்தல் என்பது மக்களின் தீர்ப்பு, அதைத் தலைவணங்கி ஏற்கிறோம். அதைப்பற்றி இப்போது பேச வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் உங்களோடுதான் இருப்போம். ​

​இன்றைய காலகட்டத்தில், தமிழ்நாட்டின் வரலாற்றை மறைத்து பல தவறான செய்திகள் திட்டமிட்டுப் பரப்பப்படுகின்றன. குறிப்பாக, தமிழக வரலாற்றிலேயே 'முதல் முறையாக ஒரு பெண் அமைச்சர்' இப்போதுதான் உருவாகியிருக்கிறார் என்றொரு தவறான செய்தி பரப்பப்படுகிறது. தமிழகத்தில் ஏற்கனவே பெண் சுகாதாரத் துறை அமைச்சர் இருந்திருக்கிறார். தி.மு.க ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு அம்மையார் சத்தியவாணி முத்து அவர்கள் தொடங்கி, கலைஞர் மற்றும் தற்போதைய அமைச்சரவை வரை தொடர்ந்து அனைத்து அமைச்சரவைகளிலும் பெண்கள் முக்கியப் பொறுப்புகளை வகித்து வந்துள்ளனர். ஆனால், அரசியல் காரணங்களுக்காகத் தவறான தகவல்கள் பரப்பப்படுகின்றன 

​நாம் இப்போது வாழ்ந்து கொண்டிருப்பது 'தகவல் யுகம்'  அல்ல; 'தவறான தகவல் யுகம்'  இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில், தகுதி என்னவென்றே தெரியாத நபர்கள் குடும்பத்தை எப்படி நடத்துவது, குழந்தையை எப்படி வளர்ப்பது, எதைச் சாப்பிட வேண்டும் என்று நாள்தோறும் ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். சாட் ஜிபிடி (ChatGPT) போன்ற தொழில்நுட்பங்களிலும் கூட பல நேரங்களில் தவறான பதில்களே வருகின்றன. இவற்றை எதையும் சிந்தித்துப் பார்க்காமல் கண்மூடித்தனமாகப் பின்பற்றினால் அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். எது சரியான தகவல், எது தவறான தகவல் என்பதைப் பகுத்து அறிவதற்குத்தான் 'பகுத்தறிவு' தேவை என்று தந்தை பெரியார் அன்றே சொன்னார்” என்றார்.