ஜன.15ல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறப்பு
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் திறக்கப்படவுள்ளது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேடில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம், 400 கோடி ரூபாயில் கட்டப்படுகிறது. 40 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட உள்ள பேருந்து நிலைத்தின் கட்டுமான பணிகள் கடந்த 2019ம் ஆண்டு தொடங்கப்பட்டது. தொடர்ந்து கட்டுமானப் பணிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், பேருந்து நிலையத்தை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரும் நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகளுக்காக, இந்த பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. இதில், அனைத்து அரசு போக்குவரத்து கழகங்கள், மாநகர போக்குவரத்து கழகம், ஆம்னி பேருந்துகள் அனைத்தும் ஒரே இடத்தில் இயக்கும் வகையில் கட்டமைப்பு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை ஆய்வு செய்தபின் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பொங்கலுக்குள் திறக்கப்படவுள்ளது. தமிழ்ப் புத்தாண்டான தை 1 முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை மக்கள் மகிழ்ச்சியாக பயன்படுத்தலாம்; கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்றார்.