கேரள நிலச்சரிவு : போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குக - தவெக தலைவர் விஜய் இரங்கல்..

 
vijay vijay


கேரள மாநிலம் வயநாடு நிலச்சரிவில் சிக்கி  பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவார நடவடிக்கைகளை போர்கால அடிப்படையில் வழங்கவேண்டும் என தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.   

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கொட்டித்தீர்த்த கனமழை காரணமாக அங்குள்ள நீர்நிலைகளில் காட்டாற்று  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனிடையே வயநாடு சூரல்மலை சுற்றுவட்டார பகுதிகளில் இன்று அதிகாலை அடுத்தடுத்து இருபெரும் நிலச்சரிவுகள் ஏற்பட்டிருக்கிறது. இதில் வைத்திரி, வெள்ளேரிமலை, மேப்பாடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். அட்டமலையில் இருந்து முண்டகை செல்வதற்கு இருந்த ஒரே ஒரு பாலலும் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டது.  அடுத்தடுத்து ஏற்பட்ட  நிலச்சரிவுகளால் வயநாடு சூரல்மலையில்  500க்கும்  மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்ததாக கூறப்படுகிறது.  

கேரள நிலச்சரிவு : போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணம் வழங்குக - தவெக தலைவர் விஜய் இரங்கல்.. 

அதிகாலை நேரத்தில் நிலச்சரிவு ஏற்பட்டதால், இதனை அறியாது வீடுகளில் தூங்கிக்கொண்டிருந்தவர் அப்படியே மண்ணில் புதைந்திருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. 700க்கும் மேற்பட்டோர் நிலச்சரிவில் சிக்கியிருக்கின்றனர். தேசிய பேரிடராக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ராணுவம் மற்றும் விமானப்படை, தேசிய மீட்புக் குழுவினர் என அனைத்து அரசு இயந்திரங்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.  நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 70 ஆக உயர்ந்துள்ளது. 

இந்நிலையில் கேரள நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “கேரளாவில் நிலச்சரிவு என்ற சோகமான செய்தியைக் கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். எனது எண்ணங்களும் பிரார்த்தனைகளும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருடன் உள்ளன. பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் அரசு வழங்க கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.