தேசிய மகளிர் ஆணைய உறுப்பினரானார் குஷ்பு! இன்னும் வேகத்துடன் போராடுவேன் என உறுதி
நடிகை குஷ்பூ, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தொடர்ந்து பெண்களின் உரிமைக்காக போராடுவேன் என்று கூறி இருக்கிறார் குஷ்பு.
பிரபல நடிகை குஷ்பூ தமிழ், தெலுங்கு ,மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துவருகிறார். இவர் திமுகவில் இணைந்து அரசியலில் ஈடுபட்டு வந்தார். பின்னர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து பணியாற்றி வந்தார். அதன் பின்னர் பாஜகவில் இணைந்த குஷ்பூ, கடந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அதன் பின்னரும் கட்சியில் தீவிர பணியாற்றி வரும் அவருக்கு பாஜகவில் தேசிய செயற்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் அவர் தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து குஷ்பூ , பெண்கள் உரிமைக்காக தொடர்ந்து போராடி வருகிறேன். அவர்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறேன். அதற்காக எனக்கு கிடைத்த அங்கீகாரமாக இதை நினைக்கிறேன். நான் இந்த அங்கீகாரத்தை வைத்துக்கொண்டு இன்னும் பெண்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் கொடுப்பேன் போராடி வருவேன் என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, பெண்களுக்கான தேசிய மகளிர் ஆணையத்தின் உறுப்பினராக குஷ்பூ சுந்தர் பரிந்துரைக்கப்பட்டதற்காக வாழ்த்துக்கள். இது அவரின் இடைவிடாத முயற்சிக்கும் பெண்களின் உரிமைகளுக்கான தொடர் போராட்டத்திற்கான அங்கீகாரமாகவும் அமைந்திருக்கிறது என்று கூறியுள்ளார். இதற்கு குஷ்பூ, மிக்க நன்றி ஜி! உங்களின் ஆதரவும் வணக்கமும் எனக்கு எப்போதும் பெரும் ஊக்கமாக இருந்து வருகிறது என்று கூறியிருக்கிறார் .