சொத்து தகராறில் மகளுக்கு அரிவாள் வெட்டு... தந்தை தூக்கிட்டு தற்கொலை!
திருச்சி அருகே வீட்டில் தந்தை தூக்கில் சடலமாக தொங்கிய நிலையிலும், மகள் வெட்டுக் காயங்களுடனும் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி மாவட்டம் அதவத்தூர் சக்தி நகரை சேர்நதவர் மூர்த்தி (71). விவசாயி. இவரது முதல் மனைவி பிருந்தா. இவருக்கு அருள்ராஜ் என்ற மகன் உள்ளார். இவரது 2-வது மனைவி லதா. இவருக்கு பிரபாகரன், கீர்த்தனா என 2 பிள்ளைகள் உள்ளனர். மூர்த்தி, தனது 2-வது மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வரும் நிலையில், முதல் மனைவியின் மகனான அருள்ராஜ் சொத்துக்களை பிரிப்பது தொடர்பாக தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று லதா, அவரது மகன் பிரபாகரன் ஆகியோர் வெளியே சென்றுள்ளனர். அப்போது, வீட்டில் இருந்த மூர்த்தி தூக்கிட்ட நிலையில் சடலமாகவும், மகள் கீர்த்தனா வெட்டுக் காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்துள்ளார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று கீர்த்தனாவை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.தகவல் அறிந்து வந்த சோமரசம்பேட்டை போலீசார், மூர்த்தியின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சொத்து தகராறில் அருள்ராஜ் கொலை செய்யப்பட்டாரா? அல்லது மகளை வெட்டிவிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.