கிருஷ்ணாவின் வாட்ஸ்அப் சாட்டில் 'Code Word'.. என்ன அர்த்தம்?? பழைய மெசேஜ்களை தோண்டியெடுக்கும் போலீஸ்..
நடிகர் கிருஷ்ணாவின் தகவல் பரிமாற்றத்தில் Code Word இருந்ததால் போலீஸார் அதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போதைப்பொருள் வழக்கில் கைதான பிரதீப் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படியில் நடிகர் ஸ்ரீகாந்தை தொடர்ந்து நடிகர் கிருஷ்ணாவும், விசாரணை வளையத்திற்குள் வந்திருக்கிறார். இதன் அடிப்படையில் கிருஷ்ணாவுக்கு சம்மன் அனுப்பிய போலீசார் அவரை பிடித்து வர 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனிடையே நேற்று காலை நடிகர் கிருஷ்ணா போதைப்பொருள் வழக்கில் நேரில் ஆஜரானார். அவரிடம் விடிய விடிய 15 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை கிழக்கு மண்டல இணை ஆணையர் விஜயகுமார், திருவல்லிக்கேணி துணை ஆணையர் ஜெயச்சந்திரன் ஆகியோர் நேற்றிரவு 11 மணி வரை கிருஷ்ணாவிடம் விசாரணை நடத்திய நிலையில், இன்று காலை முதல் மீண்டும் விசாரணை தொடங்கியிருக்கிறது.

முன்னதாக அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவர் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என தெரியவந்துள்ளது. இருப்பினும், இவ்வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பிரசாத், ஸ்ரீகாந்த் உள்ளிட்ட நபர்கள் உடனான தொலைபேசி உரையாடல்கள் மற்றும் தொடர்புகள் உள்ளதா என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். மேலும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள நடிகர் கிருஷ்ணாவின் வீடு மற்றும் கார்களிலும் போலீசார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக சோதனை மேற்கொண்டனர். அப்போது தனக்கு இரைப்பை பிரச்சனைகள் இருப்பதாக கிருஷ்ணா தெரிவித்ததை அடுத்து, அவர் பயன்படுத்தும் மருந்துகள் உள்ளிட்டவற்றையும் ஆய்வுக்காக போலீசார் எடுத்துக் கொண்டனர்.

கடந்த ஆண்டு ஆஞ்சியோ சிகிச்சை எடுத்துக் கொண்டதற்கான சான்றிதழ்கள் மற்றும் வாயு கோளாறு, அதிர்ச்சியான தகவல்களை கேட்டால் படபடப்பு ஏற்படுவது உள்ளிட்ட தனது உடல்நிலை பிரச்சினைகளுக்கான மருத்துவ சான்றிதழ்களையும் கிருஷ்ணா போலீசாரிடம் கொடுத்திருக்கிறார். உயர் ரக போதை பொருளை உபயோகப்படுத்தும் அளவுக்கு தனது உடல்நிலை இல்லை எனவும் நடிகர் கிருஷ்ணா போலீசாரிடம் விளக்கம் அளித்திருக்கிறார்.
இந்நிலையில் நடிகர் கிருஷ்ணாவின் வாட்ஸ் ஆப் தகவல் பரிமாற்றத்தில் Code Word இருப்பது தெரியவந்துள்ளது. நண்பர்களுடன் அவர் செய்த சாட்டிங்கில் ரகசிய குறியீடு வார்த்தைகளை பயன்படுத்தியிருப்பதை கண்டுபிடித்த் போலீஸார், 2020 முதல் கிருஷ்ணாவின் செல்ஃபோனில் அழிக்கப்பட்ட குறுஞ்செய்திகளை மீட்டு போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர்ந்து அவரது நண்பர்களிடமும் விசாரணை நடத்துகின்றனர்.


