திமுக - காங்கிரஸ் உறவு முறிந்ததால் கும்பகோணம் மேயர் பதவிக்கு ஆபத்து
திமுகவில் கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி விலகியதையடுத்து கும்பகோணத்தில் தமிழகத்தின் ஒரே காங்கிரஸ் கட்சி மேயராக உள்ள சரவணனை நீக்க திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர்.
கும்பகோணம் மாநகராட்சியில் 48 மாமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். திமுகவைச் சேர்ந்த ஒரு உறுப்பினர் மரணமடைந்ததை தொடர்ந்து அந்த இடம் காலியாக உள்ளது. இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு மேயர் பதவி வழங்கப்பட்டுள்ளது. 48 உறுப்பினர்கள் கொண்ட கும்பகோணம் மாநகராட்சியில் திமுகவிற்கு 39 உறுப்பினர்கள் உள்ளனர். அதிமுக - 3, இயூமுலீ - 1, மதிமுக - 1, காங்கிரஸ்- 2 சிபிஎம்- 1
இந்நிலையில் திமுக உறவை காங்கிரஸ் கட்சி இன்று முறித்துக் கொண்டது . இரண்டு உறுப்பினர்கள் கொண்ட காங்கிரஸ் கட்சிக்கு கும்பகோணம் மேயர் பதவி வழங்கப்பட்டது. மேயராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சரவணன் உள்ளார் .திமுகவின் உறவை காங்கிரஸ் கட்சி முறித்துக் கொண்ட நிலையில் , காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மேயர் சரவணன் தனது பதவியை ராஜினாமா செய்வாரா? அல்லது இவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படுமா ? என்பது கேள்விக்குறியாக உள்ளது. இந்த சூழலில் சரவணனை நீக்க திமுக கவுன்சிலர்கள் முடிவு செய்துள்ளனர். மேலும் அவருக்கு பதிலாக சு.ப.தமிழழகனை நியமிக்கவும் திமுகவினர் திட்டமிட்டுள்ளனர்.

