குவைத் தீ விபத்து - தமிழர்கள் 5 பேர் பலி?
குவைத் நாட்டில் மங்காப் நகரில் ஜூன் 12ஆம் தேதி தொழிலாளர்கள் தங்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் தமிழர்கள் உட்பட 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் 30 க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் குவைத் தீ விபத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் உயிரிழப்பு குறித்து தூதரகம் இன்னும் உறுதி செய்யவில்லை. குவைத் தீ விபத்தில் சிக்கியுள்ளவர்கள் குறித்த தகவல்கள் தொடர்ந்து சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் செஞ்சி மஸ்தான் கூறியுள்ளார்.

குவைத் நாட்டில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் கருப்பண்ணன் ராமு, வீராசாமி மாரியப்பன், சின்னதுரை கிருஷ்ணமூர்த்தி, முகமது ஷரீப், புனாஃப் ரிச்சர்டு ராய் ஆகியோர் உயிரிழந்துள்ளதாக வெளிநாடு வாழ் தமிழர் நலவாழ்வுத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தகவல் தெரிவித்துள்ளார்.


