சன்டே லாக்டவுனால் டாஸ்மாக்குக்கு அடித்த ஜாக்பாட்... ஒரே நாளில் இவ்வளவு கோடியா?
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக ஞாயிறு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முழு ஊரடங்கு நாளான இன்று டாஸ்மாக் கடைகள் செயல்படாது எனவும் தமிழக அரசு அறிவித்தது. இதனால் நேற்று காலை முதலே டாஸ்மாக் கடைகளை மொய்க்கத்தொடங்கிய மதுப்பிரியர்கள், இன்றைக்கும் சேர்த்து நேற்றே மதுபானங்களை வாங்கிக் குவித்துள்ளனர்.
தமிழகத்தில் சுமார் 5,600 மதுபான கடைகள் செயல்பட்டு வருகின்றன. பொதுவாக தமிழகம் முழுவதுமாக ஒரு நாள் ஒன்றுக்கு 70 லிருந்து 80 கோடி ரூபாய் வரை மது விற்பனை நடைபெறும். வார இறுதிநாட்களில் 100 கோடி ரூபாய் வரை மதுபானம் விற்பனையாகும். ஆனால் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, நேற்று மட்டும் ரூ. 217.96 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.
இதில் அதிபட்சமாகசென்னை மண்டலத்தில் ரூ.50.04 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளன. மதுரை மண்டலத்தில் ரூ.43.20 கோடிக்கும், திருச்சி மண்டலத்தில் ரூ.42.59 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. இதேபோல் சேலம் மண்டலத்தில் 40.85 கோடி ரூபாய்க்கும், கோவை மண்டலத்தில் ரூ.41.28 கோடிக்கும் மதுபானங்கள் விற்பனை ஆகியுள்ளது.