மார்ச் 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..
வருகிற 13ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை அருகே உள்ள திருவப்பூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயிலில், ஆண்டுதோறும் மாசிபெருந்திருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அதன்படி இந்தாண்டுக்கான மாசிபெருந்திருவிழா கடந்த 26-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் முத்து மாரியம்மன் வீதி உலா நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான 8-ம் நாள் (12.03.2023) அன்று பக்தர்கள் பொங்கல் வைத்து வழிபடுவர். 9-ம் நாளான 13ம் தேதி மாலை தேரோட்டம் நடைபெற உள்ளது.
இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்து நிலைக்கு கொண்டு செல்வர். பின்னர் மாசிப்பெருந் திருவிழா 21ம் தேதி காப்புக்களைதலுடன் நிறைவு பெறுறும். விழாவுக் கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில், 13-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. அன்றையதினம் தேரோட்டம் நடைபெறுவதையொட்டி அரசு அலுவலகங்கள் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் கவிதா ராமு அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்ய, ஏப்.1-ம் தேதி பணிநாளாக செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.