வருகிற 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..
வருகிற 24ம் தேதி விழுப்புரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மேல்மலையனூர் அங்காளம்மன் திருக்கோவிலில் வருகிற 24-ந்தேதி தேரோட்டம் நடைபெற இருக்கிறது. ஆகையால் அன்று ஒரு நாள் மட்டும் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாக அம்மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
மேலும், அன்றைய தினம் (பிப் 24) அவசர அலுவல்களை கவனிக்கும் பொருட்டு விழுப்புரம் மாவட்ட கருவூலமும் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலகங்களும் குறைந்த பணியாளர்களைக் கொண்டு இயங்கும் என்றும், மேலும் மாணவ-மாணவிகளுக்கு 24-ந்தேதி அன்று பள்ளி இறுதித் தேர்வுகள் நடைபெற தேதி நிர்ணயிக்கப்பட்டிருப்பின் அந்த தேர்வுகள் அன்றைய தேதியில் வழக்கம்போல் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ள 24-ந்தேதிக்குப் பதிலாக, விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் மார்ச் 4ம் தேதி ( 4.3.2023 - சனிக்கிழமை) பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.