"லாக்அப் மரணங்கள் தொடர்வது கொடுமையானது" - மக்கள் நீதி மய்யம் ட்வீட்!!

 
kamal

காவல்நிலையத்தில் நீதி மறுக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்தியுள்ளது.

tn

கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை கொடுங்கையூர் காவல் நிலைய விசாரணை கைதி ராஜசேகர் மரணமடைந்தார்.  பல்வேறு திருட்டு கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட இவர் மீது சோழவரம் வியாசர்பாடி ,கொடுங்கையூர், எம்கேபி நகர் உள்ளிட்ட போலீஸ் காவல் நிலையங்களில் இரண்டுக்கு மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.  இதன் காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜசேகரை காவல் நிலையம் அழைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.  அப்போது திடீரென ராஜசேகர் மயங்கி விழுந்ததாக தெரிகிறது.  

tn

இதையடுத்து ராஜசேகருக்கு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.  இதையடுத்து ராஜசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுதொடர்பாக சென்னை மாநகர காவல் ஆணையர் 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  அத்துடன் ராஜசேகர் மரணம் தொடர்பாக  5 காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.


இந்நிலையில் மக்கள் நீதி மய்யம் தனது ட்விட்டர் பக்கத்தில், "விசாரணைக்கைதிகளை நடத்த வேண்டியவிதம் தொடர்பாக நீதிமன்றங்கள் பல தீர்ப்புகள், அறிவுறுத்தல்களை  வழங்கியிருந்தாலும், லாக்அப் மரணங்கள் தொடர்வது கொடுமையானது. குற்றவாளியே என்றாலும் தண்டிக்கவேண்டியது நீதித்துறைதான், காவல்துறையல்ல என்ற எளியோனுக்கும் தெரிந்த சட்டமுறையை காவல்துறை கடைபிடிக்காமல் முரண்டு பிடிப்பது கண்டனத்துக்கு உரியது.  காவல்துறையைத் தன்வசம் வைத்திருக்கும் முதல்வர், காவல்நிலைய மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கான உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து, தமிழகத்தில் சட்டத்தின் ஆட்சியை உறுதிசெய்திட வேண்டும். காவல்நிலையத்தில் நீதி மறுக்கப்பட்டோருக்கு உரிய இழப்பீடும் வழங்கப்படவேண்டும். காவல்நிலையங்களில் மக்களுக்கு நீதி கிடைத்திட, மக்கள் நீதி மய்யம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கில் கோரியபடி“தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்தச் சட்டம் 2013ல்” உச்சநீதிமன்றத் தீர்ப்பிற்கு முரணாகவுள்ள பிரிவுகள் சீரமைக்கப்பட்டு “காவல்துறை புகார் ஆணையமானது” வலுவாக்கப்படவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.