நடுரோட்டில் செத்துகிடக்கும் மூதாட்டி... கண்டுகொள்ளாமல் டீசலை பிடித்து சென்ற மக்கள்
திருவண்ணாமலை அருகே சாலையை கடக்க முயற்சித்த மூதாட்டி மீது டீசல் டேங்கர் லாரி மோதி நிலைதடுமாறி உருண்டு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் நிகழ்விடத்திலேயே மூதாட்டி பரிதாபமாக பலியானார்.

திருவண்ணாமலை அடுத்த சோ நம்மியந்தல் கிராமத்தைச் சேர்ந்தவர் வேடியப்பன். இவர் டீசல் டேங்க் லாரி ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். நேற்று இரவு சென்னையிலிருந்து டீசல் டேங்க் லாரியில் 14 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் டேங்க் லாரியில் முழுவதுமாக டீசல் நிரம்பி கொண்டு தனது சொந்த ஊருக்கு வந்து சாலையின் ஓரம் வாகனத்தை நிறுத்திவிட்டு இரவு நேரம் என்பதால் வீட்டிற்கு சென்று படுத்து உறங்கியுள்ளார். தொடர்ந்து இன்று அதிகாலை வீட்டிலிருந்து புறப்பட்டு டீசல் டேங்கர் லாரியை எடுத்துக்கொண்டு திருவண்ணாமலையிலிருந்து திருச்சி நோக்கி புறப்பட்டுள்ளார்.
திருவண்ணாமலை புறவழிச் சாலையில் உள்ள தென் அரசம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி வந்து கொண்டிருந்தபோது மலப்பாம்பாடி கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி கனகாம்பரம் (70) தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயற்சித்த பொழுது மூதாட்டி மீது மோதாமல் இருப்பதற்காக மூதாட்டியின் மீது மோதி விபத்து ஏற்படுத்தாமல் இருப்பதற்காக வாகனத்தை வேகமாக இயக்கிய பொழுது டேங்கர் லாரி சாலையின் ஓரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கனகாம்பரம்(70) மீது வாகனம் எதிர்பாராத விதமாக மோதியதில் பரிதாபமாக சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

தேசிய நெடுஞ்சாலையில் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதை அறிந்த அப்பகுதியை சுற்றியுள்ள கிராம மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள பல்வேறு பாத்திரங்களை கொண்டு சாலையில் வழிந்து ஓடிய டீசலை எடுத்துச் சென்ற காட்சியும் நிகழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த கீழ்பெண்ணாத்தூர் போலீசார் உயிரிழந்த மூதாட்டியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்பட்டு மூதாட்டி ஒருவர் உயிரிழந்த நிலையில் சாலையில் வழிந்து ஓடிய டீசலை கிராம மக்கள் போட்டி போட்டுக் கொண்டு எடுத்துக் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


