ரூ.1.10 கோடி மதிப்பிலான முந்திரி லோடு லாரியை கடத்திய முன்னாள் அமைச்சர் மகன்...
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே முந்திரி லோடு ஏற்றிச்சென்ற லாரியை கடத்திய, முன்னாள் அமைச்சர் மகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டனர்.
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் இயங்கி வரும் தனியார் முந்திரி ஆலையில் இருந்து, 1.10 கோடி ரூபாய் மதிப்பிலான, சுமார் 12 டன் எடை கொண்ட முந்திரி லாரி மூலம் தூத்துக்குடி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. ஜப்பானுக்கு ஏற்றுமதி செய்வதற்காக கொண்டு செல்லப்பட்ட முந்திரி லோடு லாரியை, வழியிலேயே மர்ம நபர்கள் சிலர் கடத்தியுள்ளனர்.
இதுகுறித்து முந்திரி ஆலையின் மேலாளர் அளித்த புகாரின் பேரில், தூத்துக்குடி காவல் துறையினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். சுங்கச்சாவடிகளில் பதிவான காட்சிகளை வைத்து, லாரி நாமக்கலுக்கு கடத்திச் செல்லப்படுவதை கண்டுபிடித்தனர். பின்னர் நாமக்கல் காவல்துறை உதவியுடன், ராசிபுரம் அருகே லாரியை மடக்கிப் பிடித்தனர்.
விசாரணையில், கடத்தலில் ஈடுபட்டது அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லபாண்டியனின் மகன் ஜெபசிங் என்பது தெரியவந்தது. அவருடன் இருந்த விஷ்ணுகுமார், மனோகரன், ராஜ்குமார், மாரிமுத்து, செந்தில்குமார் மற்றும் பாண்டி உள்ளிட்ட 7 பேரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.