ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி நிறுவனம் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி

 
மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன் மாதம்பட்டி ரங்கராஜுக்கு சம்மன்

மாதம்பட்டி ரங்கராஜ் விவகாரத்தில் தங்கள் நிறுவனத்தை தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாதம்பட்டி ரெங்கராஜ் மீது 10 நாட்களாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை- ஜாய் கிரிசில்டா

திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக, ஆடை வடிவமைப்பு நிபுணர் ஜாய் கிரிசில்டா, பிரபல சமையல் நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக  புகார் அளித்திருந்தார். இது தொடர்பாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட ஜாய் கிரிசில்டா, மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தையும் டேக் செய்திருந்தார்.  இந்நிலையில், இந்த விவகாரத்தில் மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை  தொடர்புபடுத்தி சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பதிவிட, ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்கக்கோரி மாதம்பட்டி தங்கவேலு ஹாஸ்பிட்டாலிட்டி பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கு, நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார்.  மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தின் சார்பில், கிரிசில்டாவின் சமூக வலைதள பதிவுகளால், ஆகஸ்ட் 3 ம் தேதி முதல் செப்டம்பர் வரை 11 கோடியே 21 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தாகியுள்ளது. சமூக வலைதள பதிவுகளை நீக்க உத்தரவிட வேண்டும். மாதம்பட்டி பாகசாலா நிறுவனத்தை தொடர்புபடுத்த தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. கிரிசில்டா தரப்பில், சமூக வலைதள பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் பற்றியோ,  நிறுவனத்தின் வர்த்தக நடவடிக்கை குறித்தோ எதையும் பதிவிடவில்லை. 11 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறும் நிலையில், கேட்டரிங் ஆர்டர் எப்போது புக் செய்தனர், எப்போது ரத்து செய்யப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் பெறப்பட்டது, எவ்வளவு அட்வான்ஸ் திரும்ப கொடுக்கப்பட்டது என எந்த விவரங்களையும் தெரிவிக்கவில்லை. கேட்டரிங் ஆர்டர்கள் ரத்தானதற்கும், கிரிசில்டா கருத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என வாதிடப்பட்டது. வழக்கில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தடை கோரிய மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். இந்தநிலையில், இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதி செந்தில் குமார் , ஜாய் கிரிசில்டாவுக்கு எதிராக மாதம்பட்டி பாகசாலா நிறுவனம் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.