"போலாம் ரைட்... எந்த தடையும் இல்லை" - அதிமுகவுக்கு கிரீன் சிக்னல் போட்ட ஹைகோர்ட்!
அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தலை எதிர்த்து அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். தடைவிதிக்க மறுத்த நீதிமன்றம், அதிமுக தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைத்தது. இதே கோரிக்கையை வலியுறுத்தி அதிமுக தொண்டர் ஜெயச்சந்திரன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், "இந்த தேர்தலில் போட்டியிட யாருக்கும் வாய்ப்பு வழங்கவில்லை. 1.50 கோடி உறுப்பினர்கள் உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் வெளியிடவில்லை.
தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே இருவரின் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கு தடை விதிக்க வேண்டும்" என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு கடந்த வாரம் பொறுப்பு தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், உள்கட்சி தேர்தலில் தேர்தல் ஆணையத்துக்கு எந்த பங்கும் இல்லாமல் எதிர் மனுதாரராக சேர்த்ததால் வழக்கு விசாரணைக்கு உகந்ததா என ஆராய வேண்டும் என தெரிவித்தனர்.
இதையடுத்து, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதிகள் ஒத்திவைத்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், அதிமுக உட்கட்சி தேர்தலில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். கடந்த 6ஆம் தேதியே ஓபிஎஸ், எடப்பாடி ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் அதிகாரி பொன்னையன் அறிவித்துவிட்டார். தற்போது வேறு பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.