அரியலூர் மாணவி தற்கொலை வழக்கு சிபிஐக்கு மாற்றம்... ஹைகோர்ட் கிளை அதிரடி உத்தரவு!
தஞ்சாவூரில் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த அரியலூர் மாணவி ஒருவர் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் விடுதியில் தங்கியிருந்ததாகவும் அங்கு வார்டன் சகாய மேரி கொடுத்த தொல்லை காரணமாக தற்கொலை செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. வளாகம், கழிவறை உள்ளிட்டவற்றை சுத்தம் செய்ய சொன்னதாகவும் செய்ய மறுத்ததால் திருட்டு பட்டம் கட்டியதாகவும் வார்டன் மீது அடுக்கடுக்கான புகார்களை இறப்பதற்கு முன்னர் மாணவி கூறியுள்ளார். மாவட்ட மாஜிஸ்டிரேட்டிடமும் மரண வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் மதமாற்றம் குறித்து எந்த குறிப்பும் இல்லை. ஆனால் அவரை மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்தியதாக பாஜக தலைவர்களும் இந்து அமைப்பு தலைவர்களும் பகீரங்கமாக குற்றஞ்சாட்டினர். இதுதொடர்பாக மாணவி பேசிய வீடியோவையும் வெளியிட்டனர். இதனிடையே தமிழக காவல் துறை சகாய மேரியைக் கைதுசெய்து விசாரணை மேற்கொண்டது. இச்சூழலில் கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான மாணவி பேசிய புதிய வீடியோவில், மதமாற்றம் குறித்து எதுவும் தெரிவிக்கவில்லை. அவ்வாறு யாரும் கட்டாயப்படுத்தவில்லை என அவர் பேசியிருந்தார்.
இதனால் பாஜக தலைவர் அண்ணாமலை பொய் பிரச்சாரம் செய்தது அம்பலமாகிவிட்டதாகவும் அவரை கைதுசெய்ய வேண்டும் எனவும் பரவலாக எதிர்ப்பு எழுந்தது. இச்சூழலில் இது தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மாணவியின் பெற்றோர் தரப்பு வழக்கும் தொடுத்தனர். கடந்த முறை விசாரணையின்போது போலீஸாரின் விசாரணை சரியாக நடைபெறவில்லை எனக்கூறிய அவர்கள் வழக்கை மத்திய அரசின் சிபிஐ காவல் துறைக்கு மாற்றி உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
நீதிபதி சுவாமிநாதன் இந்த வழக்கை விசாரித்து வந்தார். இந்த வழக்கில் மாணவியின் கடைசி வீடியோவை எடுத்த நபரின் வாக்குமூலத்தை போலீஸ் பெற்று அதை சமர்ப்பித்து இருந்தனர். இதையடுத்து நீதிபதி தீர்ப்பை இன்று ஒத்திவைத்திருந்தார். அந்த வகையில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி அரியலூர் மாணவி தற்கொலை வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டார். இதனை எதிர்த்து தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.