கடவுள் சொத்து "அதற்கு" அல்ல; அரசுக்கு நிதானம் தேவை - ஹைகோர்ட் கருத்து!
செங்கல்பட்டு மாவட்டம் திருவிடந்தை பகுதியில் நித்திய கல்யாண பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 9,600 சதுர அடி நிலத்தை தனியார் கட்டுமான நிறுவனம் குத்தகைக்கு பெற்று, குடியிருப்பின் பாதையாக பயன்படுத்தி வந்தது. குத்தகை முடிவடைந்த நிலையில் அதை நீட்டிக்க கோயில் செயல் அலுவலர் ஆட்சேபம் தெரிவித்தார்.
ஆகவே 400 சதுர அடியை மட்டுமே பாதைக்காக குத்தகைக்கு தரத் தயாராக இருப்பதாக 2017ஆம் ஆண்டு இந்துசமய அறநிலையத் துறை தெரிவித்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் தொடர்ந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆர்.சுரேஷ்குமார், நிலத்தை கோயில் நிர்வாகம் பயன்படுத்தாமல் இருப்பதால், எதிர்காலத்தில் பயன்படுத்த மாட்டார்கள் என முடிவெடுக்க முடியாது என்று கூறினார்.
கோயில் சொத்துகளை தனியார் பயன்பாட்டிற்கு வழங்கும்போது அரசு நிதானமாக முடிவெடுக்க வேண்டும் என்றும், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி முக்கியமானது என்றாலும் கடவுள் சொத்துகளின் மூலமாக அது இருக்கக் கூடாது எனவும் நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கில் அனைத்து தரப்பும் கருத்து தெரிவிக்க வாய்ப்பளித்து, பரிசீலித்து உரிய முடிவெடுக்கலாம் என அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தார்.