"2019 டிஎன்பிஎஸ்சி வழக்கு... சிபிசிஐடி ட்ரீட்மென்ட் சரியில்லை" - சிபிஐக்கு மாற்றி ஹைகோர்ட் உத்தரவு!
தமிழ்நாட்டில் கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில், ராமேஸ்வரம் மையத்தில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதில் சந்தேகம் எழுந்ததால், தேர்வில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக சிபிசிஐடி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது. ஆனால் விசாரணை சரிவர நடைபெறாததால், சிபிஐ விசாரிக்க உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த முகமது ரஷ்வி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இவ்வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, 2016-2019 வரையிலான தேர்வுகளில் முறைகேடு செய்ததாக 194 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்தது. இதைப் பதிவு செய்த நீதிபதிகள் விசாரணையை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்யநாராயணா, பி.வேல்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் மீண்டும் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், தேர்வு முறைகேடு தொடர்பாக கீழ்மட்ட ஊழியர்கள் மட்டுமே கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் உயர் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து நீதிபதிகள், முறைகேடு நடந்ததாகக் கூறப்படும் கீழக்கரை மற்றும் ராமேஸ்வரம் தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட தேர்வு ரத்து செய்யப்பட்டதா எனக் கேள்வி எழுப்பியபோது, அரசு தரப்பில் இவில்லை என சொல்லப்பட்டது. இதனால் கோபமடைந்த நீதிபதிகள், தேர்தலில், ஒரு வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவில் முறைகேடு நடக்கும்போது, அந்த வாக்குச்சாவடிக்கு மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்தப்படும்போது, தேர்வு மையங்களில் முறைகேடு நிகழ்ந்தது உறுதி செய்யப்பட்ட பிறகும் தேர்வு ரத்து செய்யப்படாது ஏன் என்றனர்.
டின்என்பிஎஸ்சி தரப்பில் தேர்வு எழுதிய பின்னர், விடைத்தாள்களைக் கொண்டு செல்லும் வழியில் முறைகேடு நடந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதற்கு நீதிபதிகள், ஏடிஎம் மையங்களுக்கு பணம் எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்கப்படுகையில், பல லட்சக்கணக்கான மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடைய விடைத்தாள்களுக்கு போதிய பாதுகாப்பு அளிக்காதது ஏன் என கிடுக்குப்பிடி போட்டனர். மேலும் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தனர். இன்று வழங்கிய தீர்ப்பில் வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிடுவதாக தீர்ப்பளித்தனர்.