டிடிஎஃப் வாசனின் பைக்கை எரிக்க வேண்டும் - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு கருத்து!

 
ttf vasan

விபத்து ஏற்படுத்திய வழக்கில் டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

பிரபல யூடியூபரான டிடிஎஃப் வாசன்  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில்  பாலு செட்டி சத்திரம் அருகே பைக்கில் சென்ற போது வீலிங் செய்ய முயன்றதில் நிலை தடுமாறு கீழே விழுந்து விபத்தில் சிக்கினார். உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் வகையில் வாகனம் இயக்கியது, கவனக்குறைவாகச் செயல்படுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் (IPC 279/337), டி.டி.எஃப் வாசன் மீது பாலுசெட்டி சத்திரம் போலீஸ் வழக்கு பதிவு செய்தது.  டிடிஎஃப் வாசன் மீது ஏற்கனவே இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் 3 பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளது. பிணையில் வர முடியாத பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்யவும் போக்குவரத்து ஆணையரகம் பரிந்துரை செய்தது. இதனிடையே டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதித்து காஞ்சிபுரம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் உத்தரவிட்டார். இதனையடுத்து டிடிஎஃப் வாசன் இரண்டு முறை ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்த நிலையில், அந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 

டிடிஎஃப் வாசனின் ஜாமின் மனு இரண்டாவது முறையாக தள்ளுபடி

இதனையடுத்து டிடிஎஃப் வாசன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாமின் மனு தாக்கல் செய்ததை தொடர்ந்து அவர் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் மூன்றாவது முறையாக தாக்கல் செய்த ஜாமின் மனுவை வாபஸ் பெற்றார். இந்த நிலையில், ஜாமின் மனு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்து நீதிபதி, அவரது ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தார். மேலும் டிடிஎஃப் வாசனின் இருசக்கர வாகனத்தை எரித்து விடலாம் எனவும் ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.