#BREAKING "மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை"
மதுரை அதிமுக மாநாட்டிற்கு தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியைச் சேர்ந்த சேதுமுத்துராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், மதுரை மாவட்டம் பெருங்குடி கருப்பசாமி கோயிலின் எதிர்புறத்தில் ஆக.20ல் அதிமுக சார்பில் மாநாடு நடக்கிறது. மாநாடு நடக்கவுள்ள இடம் மதுரை விமான நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது. தினசரி அதிகளவில் விமானங்கள் வந்து செல்கின்றன. தரையிரங்கும் போது மிகவும் தாழ்வான பகுதியில் தான் விமானங்கள் பறக்கும் விமான நிலையத்தை சுற்றிய பகுதிகள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாகவே உள்ளன.அந்த பகுதி மத்திய தொழில்படை பாதுகாப்பு மற்றும் போலீசாரின் கண்காணிப்பில் உள்ளது. சுமார் 15 லட்சம் பேர் மாநாட்டிற்கு வருவதாக அதிமுகவினர் கூறுகின்றனர். அன்றைய தினம் விமானங்கள் தரையிரங்குவதில் இடையூறு ஏற்படக் கூடும் மாநாட்டில் பங்கேற்போர் பட்டாசுகள் வெடிக்கும் போது வானில் உயரத்திற்கு பறந்து வெடிக்கும் போது அசம்பாவிதம் ஏற்பட்டால் அது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
மாநாட்டிற்கு அனுமதி கோரும் முன் மதுரை விமான நிலைய அதிகாரியிடம் உரிய தடையின்மை சான்று பெறவில்லை. மாநாட்டிற்கு வருவோரால் பெருமளவு போக்குவரத்து இடையூறு ஏற்படும் எனவே ஆக 20ல் பெருங்குடியில் அதிமுக மாநாடு நடத்த தடை விதிக்க வேண்டும் மாநாடு நடத்த அனுமதிக்ககூடாது என சம்பந்தப்பட்டோருக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்நிலையில் மதுரையில் நடைபெறவுள்ள அதிமுக மாநாட்டிற்கு தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை. விமான நிலையம் அருகே மாநாடு நடைபெறுவதால் பட்டாசுகள் முதலியவற்றால் ஆபத்து இருக்கும் எனக்கூறி காரைக்குடியை சேர்ந்தவர் மனு தாக்கல் செய்த நிலையில், கடைசி நேரத்தில் மனு தாக்கல் செய்துள்ளீர்கள், விளம்பர நோக்கமா என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.