மதுரை மீனாட்சி அம்மன் கோயில் : ஆடி முளைக்கொட்டுத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்..!!
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஆடி முளைக்கொட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
உலக பிரசித்திபெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முளைக்கொட்டுத் திருவிழா, ஐப்பசி கோலாட்ட உற்சவம், நவராத்திரி கலைவிழா, மார்கழி எண்ணெய்காப்பு திருவிழா என ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு திருவிழாக்கள் நடைபெறும். அந்தவகையில் இந்த ஆண்டு ஆடி மாதத்தையொட்டி ஆடி முளைக்கொட்டுத் திருவிழா இன்று (ஜூலை 27) கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனையொட்டி மீனாட்சி அம்மன் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் இன்று காலை 10.30க்கு மேல் கொடியேற்றம் நடைபெற்றது.

அப்போது மதுரை மீனாட்சி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கொடி மரத்திற்கு முன்பாக எழுந்தருளி, பக்தர்களுக்கு காட்சியளித்து அருள்பாலித்தார். முளைக்கொட்டு திருவிழாவுக்கான கொடியேற்றம் முடிந்த பின்னர், அம்மனுக்கும் , கொடிமரத்திற்கும் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. இன்று தொடங்கிய ஆடி முளைக்கொட்டு திழுவிழா ஆகஸ்ட் 5ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதனையொட்டி நாள்தோறும் அம்மன் பஞ்ச மூர்த்திகளுடன் காலை , மாலை என இருவேளைகளிலும் ஆடி வீதியில் வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சியளிப்பர்.
நாளை(ஜூலை 28) ஆடிப்பூரத்தன்று மூலவர் , உற்சவர் மீனாட்சி அம்மனுக்கு உச்சிக்கால பூஜையில் ஏற்றி, இறக்குதல் வைபவமும், தொடர்ந்து ஆக.2ம் தேதி இரவு வீதி உலா முடிந்த பின்னர் உற்சவர் சன்னதியில் அம்மன் , சுவாமி மாலை மாற்றும் வைபவும் நடைபெறவுள்ளது. விவசாயம் செழிக்கவும், நாடு வளம்பெறவும் கொண்டாடப்படுவதே இத்திருவிழா என கூறப்படுகிறது.


