இந்திய பண்பாடு தோற்றம் & பரிணாம ஆய்வுக் குழு கலைப்பு - தமிழகத்தின் குரலுக்கு கிடைத்த வெற்றி!!

 
mp

பன்மைத்துவம் அற்ற பண்பாட்டு ஆய்வுக் குழு மறுசீரமைப்பு செய்யப்படும் என்ற அறிவிப்பு தமிழ்நாட்டின் குரலுக்கு கிடைத்த வெற்றி என சு. வெங்கடேசன் எம்.பி. தெரிவித்துள்ளார்.

su venkatesan
இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "12000 ஆண்டு கால இந்திய பண்பாடு தோற்றம் மற்றும் பரிணாமம் பற்றி ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழு பற்றி நான் நாடாளுமன்றத்தில் 20.09.2020 பூச்சிய நேரத்தில் எழுப்பி இருந்தேன். 31 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட கடிதம் ஒன்றும் ஒன்றிய அரசின் குடியரசு தலைவருக்கு  தரப்பட்டது. 16 பேர் கொண்ட அக்குழுவில்  தென் இந்தியர், வடகிழக்கு இந்தியர், சிறுபான்மையினர், தலித், பெண், தமிழ் உள்ளிட்ட தென் இந்திய மொழி ஆய்வாளர் எவருமில்லை. விந்திய மலைக்கு கீழே இந்தியா இல்லையா? வேத நாகரிகம் தவிர வேறு நாகரிகம் இல்லையா? சமஸ்கிருதம் தவிர வேறு மொழி இல்லையா? என்ற கேள்விகளை நான் எழுப்பி இருந்தேன். அந்த குழுவைக் கலைக்க வேண்டுமென குடியரசுத் தலைவருக்கான கூட்டுக் கடிதத்தில்  கோரி இருந்தோம். 



அதற்கு பதில் அளித்துள்ள ஒன்றிய அரசின் கலாச்சாரத் துறை அமைச்சர் ஜி.கிஷன் ரெட்டி (கடித எண் D.O No. T - 17025/11/ 2018 - EE (Part 1) 17.01.2022) இந்தக் குழுவின் பணி ஏற்கெனவே உள்ள மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி ஆணையத்தின் (CABA) வரையறுக்கப்பட்ட பணி வரம்பிற்கு உட்பட்டதாக இருப்பதால் அதுவே இக் குழுவின் பணியையும் சேர்த்து செய்யலாம் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும், மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி ஆணையத்தின் உள்ளடக்கம் மறு சீரமைப்பு செய்யப்படவுள்ளதாகவும், அதில் பன்மைத்துவம் உறுதி செய்யப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.  தமிழ்நாட்டின் குரலுக்கு கிடைத்த வெற்றி. 31 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நன்றி. இந்தியாவின் பன்மைத்துவத்தின் காவலராக என்றும் தமிழ்நாடு திகழும், முன் நிற்கும் என்பதற்கான இன்னொரு நிரூபணம் இது. சி.ஏ.பி.ஏ உள்ளடக்கம் அரசின் உறுதி மொழிப் படி அமையுமென்று நம்புவோம். கவனத்தோடு உறுதி செய்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.