அண்ணாமலை மீது நான்கு பிரிவுகளில் மதுரை போலீஸ் வழக்குப் பதிவு..!

 
1 1

மதுரை முருக பக்தர்கள் மாநாட்டில் சிறப்பு விருந்தினர்களாக ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மாநாட்டில் கோயில்களை விட்டு இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும், தேர்தலில் இந்துக்கள் ஒற்றுமையாக இருந்து இந்துக்களின் வாக்கு வங்கியை நிரூபிக்க வேண்டும் உள்ளிட்ட ஆறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டில் பேசிய அண்ணாமலை , இந்து மக்களிடம் ஒற்றுமை வராது என்ற தைரியத்தில் பழைய அரசியலையே அரசியல்வாதிகள் செய்து வருவதாகவும், அதனை நாம் உடைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

மேலும், பள்ளிகளுக்கு மாணவர்கள் திருநீறு வைத்துக்கொண்டு தைரியமாக செல்ல வேண்டும் என்றும்,திருப்பரங்குன்றத்திற்கு பிரச்னை என்றால் சூரசம்ஹாரம் செய்துவிட்டு திருத்தணி சென்று அமர்வோம் என்றெல்லாம் பேசியிருந்தார். இந்து முன்னணி மாநாட்டில் அண்ணா, பெரியார் விமர்சனம் செய்யப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அந்த மேடையில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருந்தும் அதனை கண்டிக்கவில்லை என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சனம் செய்தன. அதே சமயம் அரசியல் கலக்கக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை விதித்த நிலையில், அதனை மீறும் வகையில் இந்து முன்னணி மாநாட்டு தீர்மானங்கள், உரைகள் இருந்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த நிலையில் மதுரை இந்து முன்னணி மாநாடு தொடர்பாக மதுரை காவல் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்து முன்னணி நிர்வாகி செல்வகுமார் உள்ளிட்ட பலரின் மீது மத உணர்வுகளை புண்படுத்துதல், பொது அமைதிக்கும் குந்தகம் விளைவித்தல், பகைமையை தூண்டும் வகையில் பேசுவது உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தங்கள் மீதான இந்த வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்வோம் என்று கூறுகிறார்கள் இந்து முன்னணியினர். முருக பக்தர்கள் மாநாட்டிற்கு அரசு கற்பனை செய்ய முடியாத அளவுக்கு அதிகமான மக்கள் வந்தனர், மழையையும் பொருட்படுத்தாமல் அமர்ந்திருந்தனர். கடைசியில் சேர்களை அடுக்கிப்போட்டுவிட்டு எந்த அசம்பாவிதமும் இல்லாமல் கிளம்பிச் சென்றனர். மாநாடு வெற்றியை பொறுத்துக் கொள்ள முடியாத தமிழக அரசு, காவல் துறை மூலமாக வழக்கு போட்டுள்ளது என்று கூறுகிறார்கள்.