மதுரை ரயில் விபத்து : ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல்..
மதுரை ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் லக்னோவில் இருந்து ராமேஸ்வரம் செல்வதற்காக ஏராளமான பயணிகள் சுற்றுலா ரயிலில் தமிழகம் வந்துள்ளனர். இந்த ரயில் நேற்று இரவு மதுரை ரயில் நிலையத்திலிருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உத்தரபிரதேசத்தை சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும், சிலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட கேஸ் சிலிண்டரை பயன்படுத்தி, ரயில் பெட்டியை பூட்டிக்கொண்டு சமைத்தபோது விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்தவகையில் ரயில் தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தெரிவித்துள்ளதாவது, “ரயில் தீ விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியானது மிகுந்த வேதனை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலும், பிரார்த்தனைகளும்” என்று தெரிவித்துள்ளார்.