பாரதியார் கனவு கண்ட பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம் - ஓபிஎஸ்

 
ops

தமிழ் உணர்வையும்,பெண் விடுதலை உணர்வையும் ஊட்டிய மகாகவி பாரதியார் கனவு கண்ட பாரதத்தை உருவாக்க உறுதியேற்போம் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.

ttn

இதுகுறித்து  அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் "இந்திய விடுதலைப் போராட்டத்தின் போது தன் கவிதைகள் மூலம் உறங்கிக் கிடக்கும் மக்களை தட்டி எழுப்பி,  விடுதலை உணர்வினை ஊட்டிய பெருமைக்குரியவர் பாட்டுக்கொரு புலவன் மகாகவி பாரதியார்.  இந்திய நாடு விடுதலை பெறுவதற்கு முன்பே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று பாடிய தீர்க்கதரிசி.  இமயம் முதல் குமரி வரை ஒரே நாடாய் கண்டு , நாட்டுப் பற்றைப் போற்றும் வகையில் பாடிய தேசிய கவி . யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவதெங்கும் காணோம் என தமிழ் மொழியின் சிறப்பையும், உயர்வையும் உலகிற்கு எடுத்துக் கூறினார் , மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்துவோம் என பெண்ணுரிமை குறித்து குரல் எழுப்பியவர் பாரதியார்.

ttn

 தனி ஒரு மனிதனுக்கு உணவில்லை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் என்று வாழும் மனிதர் அனைவருக்கும் உணவளிக்க வேண்டியதின் அவசியத்தை வலியுறுத்தியவர்.  சுதந்திரம் பெற்று விட்டால் மட்டும் போதாது பெற்ற சுதந்திரத்தை பேணிக் காக்க யோசனையை கூறியதோடு , நாடும் வீடும் வாழ வேண்டும் என்று விரும்பிய மகாகவி பாரதியாரின் பிறந்த நாளான இன்று,  அவருக்கு எனது மரியாதையையும், வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.  அவர் பிறந்த நாளான இன்று பாரதி கண்ட பாரதத்தை உருவாக்குவோம் என்று நாம் அனைவரும் உறுதி ஏற்போம் வாழிய பாரத மணித்திரு நாடு " என்று குறிப்பிட்டுள்ளார்.