பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார் தேர்வு..
பாமகவின் புதிய கொறடாவாக மயிலம் எம்.எல்.ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாமகவில் ராமதாஸுக்கு பக்கபலமாக இருந்த எம்.எல்.ஏ. அருளை, நேற்று முன்தினம் அன்புமணி கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டார். தன்னை நீக்கும் அதிகாரம் அன்புமணிக்கு இல்லை என்றும், ராமதாஸ் மட்டுமே பாமகவின் தலைவர் என்றும் எம்.எல்.ஏ அருள் தெரிவித்தார். இதேபோன்று அன்புமனியால் யாரையும் பொறுப்பில் இருந்து நிக்க முடியாது என்றும், நிர்வாகிகள் நியமனம் மற்றும் நீக்கத்தில் தனக்கு மட்டுமே அதிகாரம் இருப்பதாகவும் மீண்டும் ராமதாஸ் திட்டவட்டமாக தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் பாமக கொறடா பொறுப்பில் இருந்தும் எம்.எல்.ஏ அருளை நீக்கி அப்புமணி ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார். இதுதொடர்பாக சபாநாயகர் அப்பாவுக்கு அவர் எழுதிய கடிதத்தில், “தமிழ்நாடு சட்டப்பேரவையில் பாட்டாளி மக்கள் கட்சியின் கொறடாவாக செயல்பட்டு வந்த சேலம் மேற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் ரா.அருள் அவர்கள் கட்சியின் கட்டுபபட்டை மீறும் வகையிலும், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும் செயல்பட்டு வந்ததற்க்காக பாட்டாளி மக்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நிக்கப்பட்டுள்ளார்.
இதைத்தொடர்ந்து பாட்டாளி மக்கள் கட்சியின் புதிய கொறடாவாக மயிலம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் திரு.சி.சிவக்குமார் அவர்கள் பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாடு சட்டபேரவையின் ஆவணங்களில் இந்த மாற்றத்தை பதிவு செய்து , உரிய ஆணைகளை பிறப்பிக்க வேண்டும் என்று தங்களை அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். அன்புமணி ஆதரவு பாமக எம்.எல்.ஏக்கள் வெங்கடேசன், சதாசிவம், சிவகுமார் ஆகியோர் சட்டப்பேரவை செயலரிடம் இந்த மனு அளித்துள்ளனர். பாமக கொறடாவாக மயிலம் தொகுதி எம்.எல்.ஏ சிவக்குமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


