உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது - பழனிசாமியை சாடிய மைத்ரேயன்..!!
உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது என எடப்பாடி பழனிசாமியை, திமுகவில் இணைந்த மைத்ரேயன் விமர்சித்துள்ளார்.
அதிமுக முன்னாள் எம்.பியும், அதிமுக அமைப்புச் செயலாளருமான மைத்ரேயன், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “அதிமுகவின் போக்கு சரியாக இல்லை. அதிமுக பொதுச்செயலாளர் பாஜகவோடு கூட்டணி அமைத்துள்ளார். ஆனால் கூட்டணியை அறிவித்த மத்திய அமைச்சர் அமித்ஷா தான், கூட்டணி ஆட்சி என்று சொல்லிக்கொண்டிருக்கிறார். குறைந்தபட்ச செயல்திட்டம் என்றும் சொல்லி வருகிறார். ஆனால் எதிலே குறைந்தபட்ச செயல்திட்டம் வரும் என்று சிந்தித்து பார்க்க வேண்டும்.
மும்மொழிக்கொள்கை , இருமொழிக்கொள்கை, கல்வி திட்டத்தில் தேசிய கல்வியா, மாநில கல்வியா, தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவது, தொகுதி மறுசீரமைப்பில் தமிழ்நாட்டிற்கு ஓரவஞ்சனை இப்படி பலவற்றில் எந்த அடிப்படையில் அவர்களுக்கு ஒருமித்த கருத்து வரப்போகிறது என்கிற தெளிவே இல்லாமல் இருக்கிறது; பல்வேறு குழப்பங்கள் உள்ளது; நிர்வாகிகள் மனக்குழப்பத்தில் இருக்கிறார்கள். ஒரு சில நபர்கள் திட்டமிட்டு கட்சியை அவர்கள் கைப்பிடியில் வைத்துக்கொண்டு செயல்படுகிறார்கள்

அமைப்பு செயலாளர் என்று எனக்கு பதவி கொடுத்தார்கல்; ஆனால் என்னை அவர்கள் பயன்படுத்திக்கொள்ளவில்லை, அதனால் தான் விலகி வந்துவிட்டேன். அண்மையில் அன்வர் ராஜா, கார்த்திக் தொண்டைமான் வந்தார்கள்; இன்று நான் வந்திருக்கிறேன். திராவிட இயக்கத்தை சார்ந்த கட்சி, பெரும்பான்மை பலத்தை உடைய கட்சி, கூட்டணியை அந்தக் கட்சிதான் முடிவு செய்யும். ஆனால் அதிமுகவை பொறுத்தவரை அதை முடிவு செய்வது டெல்லியாக உள்ளது. டெல்லி என்ன சொல்கிறதோ அதற்குதான் கட்டுப்படுவர்களாகத்தான் அதிமுக தலைமை உள்ளது.
ஒருவேளை அதிமுக ஆட்சிக்கு வந்தால் அதில் பாஜகவின் பங்கு எந்த அளவிற்கு இருக்கும், மத்திய அரசின் தலையீடு எந்த அளவிற்கு இருக்கும் என்பதையெல்லாம் யோசிப்பார்கள். ஆனால் இன்றைக்கு எந்த அளவிற்கும் பிரச்சனைஇல்லாமல் முன்னேற்ற பாதையில் தளபதியின் தலைமையில் தமிழ்நாடு பீடுநடை போட்டுக்கொண்டிருக்கிறது. இந்த ஆட்சி தொடர்வதற்குத்தான் மக்கள் வாக்களிப்பார்கள். நிச்சயம் 200ஐ தாண்டுவோம். இதில் எந்தவிதமான ஐயமும் இல்லை.
கூட்டி வரப்பட்ட கூட்டத்தி பார்த்துவிட்டு எடப்பாடி பழனிசாமி, தன்னை ஒரு எம்.ஜி.ஆர். போலவோ, ஜெயலலிதா போலவோ தன்னையும் ஒரு பெரிய தலைவர் என நினைத்துக்கொண்டிருக்கிறார். உயர உயர பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது” என்று தெரிவித்தார்.


