மாங்காடு மாணவி தற்கொலை : ஆபாச மெசேஜ் அனுப்பிய கல்லூரி மாணவர் கைது..

 
கைது


சென்னை மாங்காடு பள்ளி மாணவி தற்கொலை வழக்கில்  கல்லூரி மாணவன் போக்சோ உள்பட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையை அடுத்த மாங்காட்டில் பாலியல் தொல்லை காரணமாக 11-ம் வகுப்பு மாணவி நேற்று முன் தினம் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவத்தில், தற்கொலைக்கு முன்பாக மாணவி எழுதி வைத்த தற்கொலைக் கடிதம் அனைவரது மனதையும் கலங்கச் செய்யும்படியாக இருந்தது.

மாணவி தற்கொலை

இதுக்கு மேல என்னால   முடியாது... ரொம்ப வலிக்கிது.. எனக்கு ஆறுதல் சொல்லக்கூட யாருமே இல்லை...அந்த கனவு வந்து போகுது... படிக்க முடியல... இந்த சமூகத்துல பாதுகாப்பே இல்ல... பெண்களை மதிக்க ஒவ்வொரு பெற்றோரும் மகன்களுக்கு கற்று தர வேண்டும்... உறவினர்கள், ஆசிரியர்கள் என யாரையும் நம்பக்கூடாது... பாதுகாப்பான இடம் கல்லறையும் தாயின் கருவறையும் தான் ... அம்மா போயிட்டு வரேன்'' என்று அந்த கடிதத்தில் உருக்கமாக எழுதியிருந்தார்.

ஆபாச மெசேஜ்

மாணவி மொத்தம் 3 கடிதங்கள் எழுதியிருந்ததாகவும், அதில் முதலில் ஏழுதிய கடிதத்தை கிழித்துவிட்டதாகவும் மாங்காடு காவல் துறையினர் தெரிவித்தனர். அதில் அந்த சிறுமி  ஆசிரியரின் மகன் பெயரை குறிப்பிட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மாணவியின் தற்கொலை குறித்து, கல்லூரி மாணவர் தினேஷ் என்பவரை விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.  மாணவியின் செல்போனை ஆய்வு செய்த காவல் துறையினர், தினேஷ் அடிக்கடி அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டது தெரியவந்ததை அடுத்து அவரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில் தற்போது கல்லூரி மாணவர் தினேஷ் போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மாணவியிடம் வாட்ஸ் ஆப்பில் ஆபாசமாக பேசியது விசாரணையில் தெரியவந்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.