கோயிலில் ஆபாச படம் பார்த்த இளைஞர் கைது..
திருவல்லிக்கேணி ஆஞ்சநேயர் கோயிலில் ஆபாச படம் பார்த்துவிட்டு தப்பியோடிய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திருவல்லிக்கேணி மேயர் சிட்டிபாபு தெருவில் ஆஞ்சநேயர் கோயில் ஒன்று அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் கடந்த 19ஆம் தேதி இரவு கோயிலுக்கு வந்த அடையாளம் தெரியாத 30 வயது இளைஞர் ஒருவர், கோயிலில் அமர்ந்து தனது செல்போனில் ஆபாசப் படம் பார்த்துள்ளார். தொடர்ந்து தான் பார்த்த ஆபாசப் படத்தை அங்குள்ள சிசிடிவி கேமரா முன்பும் காண்பித்துள்ளார். இளைஞரின் இந்த அநாகரீகமான செயல்கள் கோயிலில் உள்ள சிசிடிவி கேமராவில் முழுவதுமாக பதிவாகி இருந்தது.
இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த கோவில் குருக்கள் பிரசாத், இது குறித்து ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகாரளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் , கோயிலில் அநாகரிகமாக நடந்து கொண்ட அடையாளம் தெரியாத இளைஞர் மீது மத உணர்வைத் புண்படுத்துதல், ஆபாச செயலில் ஈடுபடுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின்கீழ் வழக்குப் பதிவு செய்தனர். மேலும் சிசிடிவி கேமராவில் பதிவான அடையாளங்களை கொண்டு, தப்பியோடிய இளைஞரை தீவிரமாக தேடி வந்தனர். அதன்படி தீவிர தேடுதல் வேட்டைக்குப் பிறகு, அருண் என்கிற அந்த இளைஞரை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.
அவரிடம் விசாரணை மேற்கொண்டதில் பாண்டிச்சேரியை சேர்ந்த அந்த இளைஞர், திருவல்லிகேணி பகுதியில் உள்ள மேன்சனில் தங்கி பகுதிநேர உணவு டெலிவரி ஊழியராக பணியாற்றி வருவதும், தனியார் கல்லூரியில் விசுவல் கம்யூனிகேசன் படித்துவிட்டு மத்திய அரசு பணிக்கு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தேர்வு முடிவுகள் வர தாமதமானதால் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், சம்பவத்தன்று அதிகமாக மது அருந்தியதால் போதையில் என்ன நடந்தது என்று தெரியாமல் ஆபாச படத்தை செல்போனில் பார்த்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அத்துடன் அன்றையதினமே, மது போதையில் ஏடிஎம் கார்டு மற்றும் செல்போன் ஆகியவற்றை தொலைத்துவிட்டு பாண்டிச்சேரி சென்று விட்டதாகவும் , தன்னை மன்னித்து விட்டுவிடும்படியும் கேட்டுள்ளார். இருப்பினும் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.