ஈபிஎஸ் செய்யும் தவறுதலால் தவெக எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது- மாணிக்கம் தாகூர்
எடப்பாடி பழனிசாமியின் தவறுதலால் தமிழக வெற்றி கழகம் எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது என எம்பி மாணிக்கம் தாகூர் கூறியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய மாணிக்கம் தாகூர், “ஜிஎஸ்டி வரி குறைப்பு என்பது எந்த புரட்சியும் இல்லை தவறை திருத்தி இருக்கிறார்கள். எடப்பாடி பழனிச்சாமியின் தவறுதலால் தமிழக வெற்றி கழகம் எதிர்க்கட்சியாக உருவெடுத்து வருகிறது. அண்ணாமலை, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் சேர்ந்து தவெகவை பெரிய கட்சியாக மாற்றிக்கொண்டு இருக்கிறது. சிபிஐ, அமலாக்கத்துறை மூலமாக பல கட்சிகளை மிரட்டி தங்களது கூட்டணிக்கு வளைத்து போடும் வேலையை அமித்ஷா செய்து வருகிறார்.
டிடிவி தினகரன் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறிய ஒரு வாரத்தில் சசிகலாவை சார்ந்த இடத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெறுகிறது. அமித்ஷாவும், நிர்மலா சீதாராமனும் சொந்தக் கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு சிபிஐ, அமலாக்கத்துறையை பயன்படுத்தி வருகிறார்கள். தமிழகத்தில் மிரட்டும் அரசியலை தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக எதிர்க்கட்சியாக இருக்க அந்தச் இல்லாத கட்சியாக மாறிவிட்டது. அந்த இடத்தை விஜய்தான் நிரப்புவார். எதிர்க்கட்சி அந்தஸ்து எடப்பாடி பழனிச்சாமி இடம் இல்லாமல் போகும்” என்றார்.


