12 மணி நேர வேலை சட்ட முன்வடிவு நிறுத்திவைப்பு - மநீம தலைவர் கமல்ஹாசன் வரவேற்பு..
தமிழக அரசின் 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.
தமிழகத்தில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவற்றில் 12 மணிநேர வேலைக்கு வகை செய்யும் தொழிற்சாலைகள் சட்டத்திருத்த மசோதா, சட்டப்பேரவையில் கடந்த 21ம் தேதி தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த சட்ட மசோதா தொழிலாளர்களுக்கு எதிரானது என்றுக்கூறி கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, திராவிடக் கழகம், அதிமுக, பாஜக, பாமக போன்ற அனைத்துக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. அதேபோன்று பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து இந்த சட்டம் நிறுத்தி வைக்கப்படுவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இதுகுறித்து இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன், “தொழிற்சாலைகளில் 12 மணி நேர வேலை என்கிற சட்ட முன்வடிவின் மீதான மேல்நடவடிக்கை நிறுத்தி வைக்கப்படுகிறது எனும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவிப்பை வரவேற்கிறேன். யார் சொல்கிறார்கள் என்பதை விட என்ன சொல்கிறார்கள் என்பதற்கு முக்கியத்துவம் கொடுத்து மாற்றுத் தரப்பின் நியாயமான கருத்துக்களுக்கும், மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பளித்து செயல்படுவது ஓர் ஆரோக்கியமான அரசின் அடையாளங்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களைப் பாராட்டுகிறேன். 12 மணி நேர வேலை எனும் அறிவிப்பை நிரந்தரமாக ரத்து செய்ய ஆவன செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.