#மணிப்பூர்: ராணுவத்தை அவமதிப்பதா? இன்று கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளோம் - திருமா
மணிப்பூர் விவகாரத்தில் ராணுவத்தை அவமதிப்பதா? என்று இன்று கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளோம் என்று திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மணிப்பூரில் இந்திய ராணுவத்தை அவமதிக்கும் விதமாக அஸ்ஸாம் ஃரைபிள்ஸ் துணை ராணுவப் படைமீது மணிப்பூர் பாஜக அரசின் காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. ராணுவத் தரப்பில் மணிப்பூர் காவல்துறையின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். மணிப்பூர் போலீஸ் ஒரு சார்பாக இருப்பதும், நிர்வாணமாக ஊர்வலம் விடப்பட்ட பெண்களை அவர்கள்தான் ஆயுதம் தாங்கிய மெய்த்தி கும்பலிடம் ஒப்படைத்தனர் என்பதும் அந்தப் பெண்களின் வாக்குமூலத்தால் அம்பலமாகியுள்ளது. உச்சநீதிமன்றம் தானே முன்வந்து விசாரிக்கும் வழக்கில் மணிப்பூரில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை மேற்பார்வை செய்ய பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ‘அஸ்ஸாம் ஃரைபிள்தான்’ அங்கு கலவரம் பரவாமல் கொஞ்சமாவது தடுத்து வருகிறது. இந்நிலையில் துணை ராணுவப் படையையே அவமதிக்க மணிப்பூர் பாஜக அரசு முனைந்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இதைப்பற்றி அவையில் விவாதிக்க வேண்டும் என நானும் Ravi Kumar அவர்களும் கவன ஈர்ப்பு நோட்டீஸ் அளித்துள்ளோம் " என்று குறிப்பிட்டுள்ளார்.