வடமாநில தொழிலாளர் குறித்து வதந்தி- மணிஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது
வடமாநில தொழிலாளர் பற்றி போலி வீடியோ பரப்பிய வழக்கில் பீகார் மாநில யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை நீலாங்கரை போலீசார் கைது செய்துள்ளனர்.
தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவது தொடர்பாக கடந்த சில மாதத்திற்கு முன்பு போலி வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் பொய்யான வீடியோக்களை பரப்பிய நபர்களை தமிழக காவல்துறை கண்டறிந்து கைது நடவடிக்கையில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் வட மாநிலத்தவர்கள் தாக்கப்பட்டதாகவும், கொல்லப்பட்டதாகவும் 30 வீடியோக்கள் போலியாக பரப்பப்பட்ட விவகாரத்தில் பீகார் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது மதுரை மாவட்ட சைபர் கிரைம் போலீசார் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இதற்கிடையே வடமாநில தொழிலாளர்கள் குறித்து அவதூறு பரப்பும் வகையில் வீடியோ பரப்பிய வழக்கில் யூடியூபர் மனிஷ் காஷ்யப் பீகார் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மதுரை மாவட்ட போலீசாரால் வழக்குபதிவு செய்திருந்த வழக்கில் பீகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை மதுரை மாவட்ட போலீசார் கைது செய்து தமிழகத்திற்கு கொண்டு வந்து மதுரை சிறையில் அடைத்தனர். இதனையடுத்து தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் போலி வீடியோ பரப்பிய யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வடமாநில தொழிலாளர் குறித்து போலி வீடியோ பரப்பியது தொடர்பாக பெருங்குடியை சேர்ந்த ஜெகதீசன் அளித்த புகாரில் யூடியூபர் மணிஷ் காஷ்யப் மீது அடையாறு சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வந்த நிலையில், இன்று யூடியூபர் மணிஷ் காஷ்யப்பை கைது செய்துள்ளனர். மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ள மணிஷ் காஷ்யப்பை அடையாறு சைபர் கிரைம் போலீசார் கைது செய்து அவரை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். பின்னர் கைது செய்யப்பட்டுள்ள மணிஷ் காஷ்யப்பை போலீஸ் காவல் எடுத்து விசாரணை நடத்த அடையாறு சைபர் கிரைம் போலீசார் திட்டமிட்டுள்ளனர்.