நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கு காலவரையற்ற விடுமுறை..!!
மனோன்மணியம் பல்கலைக்கழகத்தில் நேற்று மாணவர்கள் கோஷ்டி மோதலில் ஈடுபட்ட நிலையில், நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
நெல்லையை அடுத்த மணிமுர்த்தீஸ்வரம் பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி என்பவரது மகன் லட்சுமி நாராயணன்(18) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் குமார் என்பவரது மகன் ஆகாஷ்(18) ஆகிய இருவரும் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஒன்றாக படித்து வருகின்றனர். நண்பர்களான இவர்கள் நேற்றைய தினம் (ஆக.28) ஒன்றாக பைக்கில் பல்கலைக்கழகத்திற்கு வந்தவர்கள், வகுப்பறைக்குச் செல்லாமல் வளாகத்திலேயே இருவரும் பைக்கில் சுற்றி வந்துள்ளனர். அப்போது அவர்களுடன் ஒரே வகுப்பில் பயிலும் முத்துச்செல்வம், அருண், மதார், மதுசூதணன், சுந்தர் மற்றும் சிலர் அங்கு வந்து அவர்களை தடுத்து நிறுத்தியுள்ளனர். அத்துடன் பல்கலைக்கழக வளாகத்திற்குள் இதுபோன்று பைக்கில் சுற்றித்திரியக்கூடாது என்றும் கூறியதாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்கிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதோடு, கைகலப்பாக மாறியுள்ளது. மாணவர்கள் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்ட நிலையில், அங்கு மேலும் சில மாணவர்கள் வரவே கோஷ்டி மோதலாக மாறியது. இந்த மோதலில் லட்சுமி நாராயணானுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு, எதிர்தரப்பில் முத்துச்செல்வம் என்கிற மாணவரும் காயம் ஏற்பட்டிருக்கிறது. இருவரும் பாளையங்கோட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருதரப்பும் தனித்தனியாக காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். மாணவர்களுக்கிடையேயான இந்த மோதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு மறுதேதி அறிவிக்கும் வரை, காலவரையற்ற விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


