மார்ச் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை..
அய்யா வைகுண்டசாமி அவதார தினத்தையொட்டி, மார்ச் மாதம் 4ம் தேதி தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக போராடியவர்களுள் பெரும் பங்கு ஐயா வைகுண்டர் சாமிக்கு உண்டு. அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இருந்த சாதிய பாகுபாடுகளுக்கு எதிராக போராடியதுடன் கன்னியாகுமரி மாவட்டம் சுவாமி தோப்பில் சமத்துவ கிணறு ஒன்றையும் நிறுவினார். இவரை அப்பகுதி மக்கள் சிவன், பிரம்மா, விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் ஒருங்கிணைந்த அவதாரமாக வணங்கி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 20ஆம் தேதி சுவாமிதோப்பு அய்யா வைகுண்டரின் அவதார தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்தவகையிக் இந்தாண்டு மார்ச் 4ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதனையொட்டி, அய்யா அவதார தினத்தை அவரது பக்தர்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் தென்காசி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய 3 மாவட்டங்களுக்கு வரும் மார்ச் 4ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். அந்தவகையில் தற்போது தென்காசி மாவட்டத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த உள்ளூர் விடுமுறை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.