வில்லிவாக்கம் தொழிற்சாலையில் கெமிக்கல் பேரல் வெடித்து விபத்து..
சென்னையில் தனியார் தொழிற்சாலையில் கெமிக்கல் பேரல் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
சென்னை வில்லிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டையில் தனியார் கெமிக்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அங்கிருந்த கெமிக்கல் பேரல் ஒன்று திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, தீ பற்றி எரிய தொடங்கியுள்ளது. தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவுவதை கண்ட ஊழியர்கள், இது குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.
தகவலின் பேரில், அம்பத்தூர், அண்ணா நகர், வில்லிவாக்கம் பகுதிகளில் இருந்து 6 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கொளுந்து விட்டு எரிந்த தீயின் மீது, தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், இந்த விபத்தில் சிக்கி காயமடைந்த ஊழியர் கீர்த்தி வாசன் என்பவரை தீயணைப்பு படையினர் மீட்டு, சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தீ விபத்தால் தொழிற்சாலையின் தரை தளத்தில் உள்ள லேத் பட்டறையில் இருந்த 10 இயந்திரங்கள் தீயில் எரிந்து சேதமடைந்தன. இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்து வில்லிவாக்கம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.