பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும் - அன்புமணி விமர்சனம்..!!
பிகார் பயணம் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பிஹார் மாநிலத்தில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தத்திற்கு ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தேர்தல் ஆணையம் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதாகவும் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். அத்துடன் வாக்கு திருட்டை கண்டித்து பீகார் மாநிலத்தில் அவர், வாக்காளர் அதிகார யாத்திரை என்னும் பெயரில் பேரணி மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி மேற்கொண்டு வரும் பேரணியில் பங்கேற்றுள்ளார். இந்த பிகார் பயணம் முதலமைச்சருக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கட்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பான அவரது எக்ஸ் தள பதிவில், “முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிகாருக்கு சென்றுள்ளார். புத்தருக்கு ஞானம் கொடுத்த போதிமரம் பிகாரின் புத்த கயாவில் தான் இருந்தது. அதேபோல், சமூகநீதி ஞானம் வழங்கிய கர்ப்பூரி தாக்கூர், பிந்தேசுவரி பிரசாத் மண்டல், இராம் அவதேஷ் சிங், சரத்யாதவ், லாலு பிரசாத், நிதிஷ்குமார் உள்ளிட்டோரை வழங்கிய மண்ணும் பிகார் தான். இந்தியாவில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்தி, அதன் விவரங்களை முதன்முதலில் வெளியிட்டு, நடைமுறைப்படுத்திய மாநிலமும் பிகார் தான். அத்தகைய சிறப்பு மிக்க பிகார் மண் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமூகநீதி ஞானத்தை வழங்கும் என்று எதிர்பார்ப்போம். சென்னை திரும்பியதும் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த ஆணையிடுவார் என்று நம்புவோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.


